முன்னாள் ரவுடி வெட்டிக்கொலை... போலீசார் உடந்தையா..? உறவினர்கள் புகார்...

சென்னை காசிமேட்டில், கஞ்சா விற்பவர்களை தட்டிக்கேட்ட முன்னாள் ரவுடியை, மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apr 25, 2024 - 17:25
முன்னாள் ரவுடி வெட்டிக்கொலை... போலீசார் உடந்தையா..? உறவினர்கள் புகார்...

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு உட்பட்ட தீடீர் நகரில் வசித்து வந்தவர், 46 வயதான தேசிங்கு ராஜா. இவர் மீது கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் உள்ள நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று தனது வீட்டின் தெரு முனையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ஆட்டோவில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், ஈசி சேரில் அமர்ந்திருந்த தேசிங்கு ராஜாவை கத்தியால் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த தேசிங்கு ராஜா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார், தேசிங்கு ராஜாவின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பிச்சென்ற மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

இந்நிலையில், உயிரிழந்த தேசிங்கு ராஜாவின் தாயார், போலீசார் பணம் வாங்கிக் கொண்டு, காசிமேடு பகுதியில், கஞ்சா, போதை மாத்திரை, மதுபானம் உள்ளிட்ட பொருட்களை கள்ளச் சந்தையில் விற்க அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், கஞ்சா விற்பனை செய்வதை தட்டிக்கேட்டதால், முன்விரோதம் காரணமாகவே, தனது மகனை கஞ்சா விற்கும் கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளதாகவும், இதற்கு போலீசாரும் உடந்தை எனவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.   

திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி, கஞ்சா விற்பனை கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow