சென்னை நட்சத்திர ஓட்டல் பப்பில் கந்த சஷ்டி பாடல்: மதுபோதையில் ஆபாச குத்தாட்டம், இந்து அமைப்பினர் புகார்
சென்னையில் நட்சத்திர ஓட்டல் பப்பில் கந்த சஷ்டி கவச பாடல் போட்டு மதுபோதையில் ஆடியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாரத் இந்து முன்னணி புகார் அளித்துள்ளனர்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானை இழிவு படுத்தும் வகையிலும், மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும் செயல்படும் தனியார் ஓட்டல் நிர்வாகம் மீது பாரத் இந்து முன்னணி சார்பில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பாரத் இந்து முன்னணியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் மோகன் மற்றும் வழக்கறிஞர்கள் புகார் கொடுத்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தனர். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் உள்ள பப்பில் மதுபானம் குடித்து விட்டு பலர் நடனம் ஆடினர். அப்போது கந்த சஷ்டி கவச பாடலை போட்டு அனைவரும் ஆடி உள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து வாரந்தோறும் இந்த பாடலை இசைத்து முருகப்பெருமானை அவதிக்கும் செயலில் ஓட்டல் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
கந்த சஷ்டி கவசத்தின் புனிதமான மரபுகள் மாற்றியமைக்கப்பட்டு கேலி செய்யும் வகையில் செய்யப்பட்டுள்ளது. மதுபானம் அருந்திய பெண்கள் நடனம் ஆடுவதற்கு புனிதமான மந்திர வடிவில் அமைந்த அந்த பாடல் இழிவுபடுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளோம். இந்த புகாரிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வடபழனி முருகன் கோவிலில் மனு கொடுக்க முடிவு செய்வோம்" என்று வழக்கறிஞர் மோகன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?

