அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் ஐகோர்ட் அதிருப்தி
நீதிமன்றம் தேவைக்கு அதிகமாகவே தனது நேரத்தை வீணடித்திருப்பதாக அதிருப்தி
![அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் ஐகோர்ட் அதிருப்தி](https://kumudam.com/uploads/images/202312/image_870x_657d509c3a6ea.jpg)
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட சூறையாடப்பட்ட விவகாரத்தில் தேவைக்கு அதிகமாகவே நீதிமன்றத்தின் நேரம் வீணடித்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் 2023ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி வானகரத்தில் நடந்தபோது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்பட்டது. அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.
இதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தடுத்ததால் அங்கு மிகப்பெரிய கலவரம் நடந்தது. பின்னர் அதிமுக அலுவலகம் மூடப்பட்டது. அலுவலக கதவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உடைத்து உள்ளே நுழைந்தனர்.பின்னர், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் புகார் அளிக்கபட்டாது.
புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மாநிலங்களை உறுப்பினர் சி.வி சண்முகம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் செயல்படுகின்றனர். ஆவணங்களை திருடிய சம்பவத்தை சிவில் பிரச்சினையாக கொண்டு வருகின்றனர், எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் சரியாக இருக்கும் என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கிடையே இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரான், இந்த சம்பவம் வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 40 பேர் முன்ஜாமின் வாங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். 116 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
விசாரணைகள் முறையான கோணத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். வழக்குகள் குறித்த விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து நீதிபதி, ஜெயச்சந்திரன் வழக்கை நான்கு வாரத்துக்கு ஒத்திவைத்து, அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தேவைக்கு அதிகமாகவே தனது நேரத்தை வீணடித்திருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, காவல்துறை தனது பணியை விரைவாக செய்யட்டும் என்றும் தெரிவித்தார்.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)