மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொத்துக்கு உரிமை கோரி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு 

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு உரிமை கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொத்துக்கு உரிமை கோரி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு 
மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொத்துக்கு உரிமை கோரி வழக்கு

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988 ஆம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 2.7  ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியுள்ளார்.கடந்த 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் இரண்டாவது மனைவியின் மகன் நடராஜன் மற்றும் மகள் சிவகாமி ஆகியோர் வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்து விற்பனையை செல்லாது என அறிவிக்கக் கோரியும், சொத்தில் பங்கு கோரியும் செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், முழுமையான விசாரணை பின்பே, சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறி, போனி கபூர் குடும்பத்தினரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் கூட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், போலி வாரிசு சான்றிதழ் பெற்று வழக்கு தாக்கல் செய்துள்ளதால், தங்கள் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் நிராகரித்தது தவறு எனவும் சுட்டிக்காட்டி இருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  டி.வி.தமிழ்செல்வி, ஏற்கனவே இதே சொத்தில் பங்கு கேட்டு  மனுதாரர்கள் தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி  செய்துள்ளது; தற்போது சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தி, சொத்தை அபகரிக்கும் நோக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு  தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கை  நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவி குடும்பத்தார் தாக்கல் செய்த  மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்கை நிராகரித்தும் உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow