அதிமுக விருப்ப மனு 4 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு அளிக்க மேலும் 4 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்து எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வினியோகத்தை டிசம்பர் 15ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் 234 தொகுதிகளில் போட்டியிட சுமார் 10 ஆயிரம் பேர் விருப்ப மனு அளித்து இருந்தனர்.
விருப்பமனு தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து,அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்சியினர் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, டிசம்பர் 28ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் டிசம்பர் 31ம் தேதி புதன் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சியினர் அதற்கான படிவங்களை பெறலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம்'' என குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?

