ஜாபர் சாதிக் விவகாரம்; இயக்குநர் அமீரிடம் என்.சி.பி விசாரணை நிறைவு

போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்

Apr 3, 2024 - 05:44
ஜாபர் சாதிக் விவகாரம்; இயக்குநர் அமீரிடம் என்.சி.பி விசாரணை நிறைவு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீரிடம் போதைப் பொருள் கடத்தல் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். 

டெல்லியில், போதைப் பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களை வெளிநாடு கடத்த முயன்ற 3 பேரைக் காவல்துறை அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் 2000 கோடி மதிப்புள்ள மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படன. மேலும், விசாரணை மேற்கொண்டதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் என்பவர்தான் இதன் மூளையாகச் செயல்பட்டார் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து, சென்னையில் வைத்து ஜாபர் சாதிக்கைக் கடந்த மாடஹ்ம் 9-ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அதன்படி, ஜாபர் சாதிக் தயாரித்து வந்த திரைப்படத்தின் இயக்குநர் அமீருக்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. 

இயக்குநர் அமீர் டெல்லியில் உள்ள தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் ஜாபர் சாதிக் அளித்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து 10 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இரவில் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow