சிறையில் இருந்த வெளியே வந்து செம மாஸ்.. ஆஞ்சநேயரின் ஆசியோடு பிரசாரத்தை துவங்கும் அரவிந்த் கெஜ்ரிவால்

அனுமனின் ஆசியோடு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

May 11, 2024 - 12:13
சிறையில் இருந்த வெளியே வந்து செம மாஸ்.. ஆஞ்சநேயரின் ஆசியோடு பிரசாரத்தை துவங்கும் அரவிந்த் கெஜ்ரிவால்

சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் வெளிவந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அனுமனின் ஆசியோடு தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். 

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமின் கோரியும் உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதேவேளையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறையினர் 44 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 

வழக்கு விசாரணையின் முடிவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.  ஜூன் 4ஆம் தேதி வரை ஜாமின் கோரப்பட்டு இருந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி வரை ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜூன் 2 அன்று மீண்டும் ஆஜாராகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே, டெல்லியில் மொத்தம் 7 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு அனைத்து தொகுதிகளுக்கும் வரும் மே 25ஆம் தேதி ஒரே கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக அங்குத் தனித்துக் களமிறங்கும் நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்கின்றனர். 

இந்நிலையில், இன்று டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தனது மனைவி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சென்று சாமி தரிசனம் செய்தார். நீண்ட நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை பார்ப்பதற்கு அவரது ஆதரவாளர்கள் கோயில் முன்பு திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. அவருக்கு ஆரவாக பலரும் முழக்கமிட்டனர். 

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவருக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளதால் அனுமனின் ஆசியோடு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இன்று மாலையில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நடக்கும் ரோடு ஷோவில் பங்கேற்று தேர்தல் பிரசாரமும் செய்யவிருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow