எடப்பாடி பழனிசாமி வழக்கில் தடையை நீக்கக் கோரி உதயநிதி பதில்மனு தாக்கல்

உதயநிதி ஸ்டாலினின் பதில்மனுவுக்கு விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது

Jan 23, 2024 - 14:02
Jan 23, 2024 - 14:21
எடப்பாடி பழனிசாமி வழக்கில் தடையை நீக்கக் கோரி  உதயநிதி  பதில்மனு தாக்கல்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துக்களை தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனம் குறித்த புரிதல், கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் நிலைப்பாடு, ஆளுனருடன் நட்பு ஆகியவற்றை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும், உதயநிதி பேசியிருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கோரியும், தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டுமே அறிக்கை வெளியிட்டதாக கூறியிருக்கிறார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தங்கள் தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதனால் தான் கூறிய கருத்துக்கும், இந்த வழக்குக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூற முடியாது என உதயநிதி ஸ்டாலின் தனது பதில்மனுவில் கூறியிருக்கிறார்.
கொடநாடு சம்பவம் நடந்த போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தார் என்பதால் பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து பொதுநலன் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என பதில்மனுவில் கோரியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பதில்மனுவுக்கு விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26ம் தேதிக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow