செந்தில் பாலாஜி மீது ஜன.22ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

செந்தில்பாலாஜி மீது ஜனவரி 22 அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவிப்பு

Jan 11, 2024 - 17:18
Jan 11, 2024 - 18:54
செந்தில் பாலாஜி மீது ஜன.22ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு  செய்ய நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஜனவரி 22ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ள சென்னை முன்மை அமர்வு நீதிமன்றம், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்த  உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.அவருக்கு எதிராக சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஜனவரி 11)  முடிவடைந்ததை அடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை 15வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.இதற்கிடையில், தனக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் அமலாக்க துறை திருத்தம் செய்துள்ளதாகவும்,  தங்களுக்கு ஆவணங்கள் முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது? எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.செந்தில்பாலாஜியின் இந்த மனுவுக்கு ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.பின்னர், இந்த வழக்கில் செந்தில்பாலாஜி மீது ஜனவரி 22 அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி அல்லி, அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்தும்படி  உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow