வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை உயர்த்தக்கோரிய மனு தள்ளுபடி

விளம்பரத்துக்காகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

Jan 9, 2024 - 14:14
Jan 9, 2024 - 23:24
வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை உயர்த்தக்கோரிய மனு தள்ளுபடி

மக்களவை, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை உயர்த்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 25 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 10 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள், இத்தொகைகளில் பாதியை டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.

பல ஆண்டுகளாக இத்தொகை உயர்த்தப்படவில்லை என்பதால், இதனை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அனுப்பிய மனுவை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தேர்தலுக்கு வேட்பாளர்கள் கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு டெபாசிட் தொகையை உயர்த்த வேண்டும். இதன் மூலம், தேர்தலுக்கு அரசு செய்யும் செலவு குறைவதற்கான வாய்ப்பும் உள்ளது என்பதால் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் அதிகரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வேட்பாளர்கள் டெபாசிட் தொகை சட்டப்படி வசூலிக்கப்படுவதால், அதை உயர்த்தக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி உத்தரவிட முடியாது. இந்த வழக்கை பொது நல வழக்காக கருத முடியாது. விளம்பரத்துக்காகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow