காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிவு: நாடாளுமன்ற இருக்கைகளை மாற்றக்கோரி சபாநாயகருக்கு கனிமொழி கடிதம்!
திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளதால், நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றக்கோரி கனிமொழி எம்பி சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, பல தசாப்தங்களாக நீடித்த திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர்களுக்கான இருக்கை வசதிகளை மாற்றக் கோரி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய தேசிய காங்கிரஸுடனான எங்கள் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. எனவே, அவையில் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகிலேயே திமுக உறுப்பினர்கள் அமர்ந்திருப்பது தற்போதைய சூழலில் பொருத்தமாக இருக்காது" என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவையில் தனித்தனி இருக்கைகளை ஒதுக்கீடு செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அவர் சபாநாயகரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
What's Your Reaction?