ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கு எதிரான தவெக வழக்கு: 3 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நட்துவதற்காக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதனை எதிர்த்து தவெக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 3 வாரத்திற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக அரசு, ஜனவரி 5ம் தேதி அரசிதழில் வெளியிட்டது.
இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, த.வெ.க. தரப்பில், பொதுக்கூட்டங்கள் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது. நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதிகள், இந்த விதிகளில் என்ன தவறு உள்ளது. கரூரில் நடந்த வேதனைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழிகாட்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல துவங்கப்படுகின்றன. அவை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. பல தேர்தல்களில் போட்டியிட்டு, எம்.பி. - எம்.எல்.ஏ.க்களை பெற்ற நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், த.வெ.க. எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது எனவும் தலமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசுத்தரப்பில், இந்த வழிகாட்டி வழிமுறைகள் த.வெ.க. இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்த நிபந்தனைகளின்படி 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு விதிக்ள் வகுக்கப்பட்டுள்ளதால், அதை தவிர்க்க 4,998 பங்கேற்பாளர்க்ள் என கூறி விண்ணப்பிக்கின்றனர். ஒரே நாளில் ஒரே இடத்துக்கு பல கட்சிகள் விண்ணப்பிக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இல்லாவிட்டால் முதலில் வருவோருக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிக்ள் இந்த வழிகாட்டு விதிமுறைகளை ஏற்றுள்ள நிலையில் மனுதாரர் கட்சி மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகு தான், வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கூரை அமைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைனில் விண்ணப்பங்களை பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்க கூடாது என அரசுத்தரப்பை கேட்ட நீதிபதிகள், த.வெ.க. மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
What's Your Reaction?

