கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கிருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது.
72 குண்டுகள் முழங்க மரியாதை
இறுதிச் சடங்குகள் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மறைந்த தலைவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்துத் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது முன்னிலையில், தமிழக காவல்துறையினரின் சார்பில் நல்லகண்ணுவுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க, காவல்துறை இசைக்குழுவினரின் மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறுதி ஊர்வலம்
அரசு மரியாதையைத் தொடர்ந்து, நல்லகண்ணுவின் விருப்பப்படி மாணவர்களின் படிப்புக்காக சென்னை மருத்துவ கல்லூரிக்கு அவரின் உடல் தானமாக அளிக்கப்படுகிறது. கட்சியினர் அணிவகுப்போடு மருத்துவக் கல்லூரியில் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. அவரது மறைவு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
What's Your Reaction?

