விடைபெறும் வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் 

வடகிழக்கு பருவமழை அடுத்த 7 நாட்களில் விடைபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

விடைபெறும் வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் 
Farewell Northeast Monsoon

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்படி நேற்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.மேலும் நாளை (ஜன.14) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow