"தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை" - மதுரை உயர்நீதிமன்றம்

ஒரு தனி நபரின் நினைவாக சிலை வைப்பதை அரசு தடுக்கவோ, தலையிடவோ முடியாது என்பதால் அரசு அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை..!

Feb 5, 2024 - 19:20
"தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை"  - மதுரை  உயர்நீதிமன்றம்

ஒரு தனி நபரின் நினைவாக சிலை வைப்பதை அரசு தடுக்கவோ, தலையிடவோ முடியாது  என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது. 

ராமநாதபுரம் மாவட்டத்தைச்  சேர்ந்த வேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  மனு தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது:- 

முஷ்டக்குறிச்சியில் உள்ள  தனது  பட்டா நிலத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வெண்கலச் சிலை வைக்க அனுமதி கோரி ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்ததாகவும்,  அதுகுறித்து  எந்த உத்தரவும் பிறப்பிக்காததால், உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார். 

அங்கு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, மாவட்ட ஆட்சியர் இதனை பரிசீலிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், இந்த  உத்தரவு நிறைவேற்றப்படவில்லை  எனக் குறிப்பிட்ட அவர், தனது  பட்டா நிலத்தில் தேவர் சிலை வைக்க அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்  எனவும்  அந்த மனுவில் கோரியிருந்தார். 

இந்த மனு  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்  முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவர் கூறிய தீர்ப்பானது:

"இதுவரை அதிகாரிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவே. இந்த மனுவை முன்னுரிமை அடிப்படையில் நீதிமன்றம் பரிசீலிக்கிறது தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் விடுதலை போராட்ட வீரரின் சிலையை வைக்க வேண்டுமென மனுதாரர் கேட்கிறார். இதற்கு அரசிடமோ, உரிய அமைப்பிடமோ முறையான அனுமதி தேவையா? என்றால் அவர்களது பட்டா நிலத்தில் வைக்க அரசு அனுமதி தேவையில்லை. பட்டா வைத்திருப்பவருக்கு அந்த நிலத்தின் மீதான உரிமை உள்ளது. சட்டப்பூர்வ அல்லது பொதுச் சட்டத்தின் படியான உரிமையை நிர்வாக அறிவுறுத்தல் அல்லது அரசு உத்தரவுகள் மூலம் கட்டுப்படுத்தவோ, பறிக்கவோ முடியாது. 

பொது வழிபாட்டிற்கான மத கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றால் ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அங்கு சிலைகளை வைப்பதற்கு சட்டப்பூர்வ விதிகள் எதுவும் இல்லை. ஒரு தனி நபரின் நினைவாக ஒரு சிலையை வைப்பதைத் தடுக்கவோ, தலையிடவோ முடியாது  என்பதால் அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. எனவே, மனுதாரர் தரப்பு தனியாருக்குச் செந்தமான பட்டா நிலத்தில்  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலையைத் திறக்கும் சுதந்திரம் உள்ளது என அறிவிக்கிறேன்", என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க  | பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறைப்படுத்த தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகள் நியமனம்..!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow