சென்னை சென்ட்ரல் லாட்ஜில் பயங்கரம் : ரகசிய கேமிராவில் நர்ஸ் குளிப்பதை வீடியோ எடுத்த லாட்ஜ் ஊழியர் கைது
சென்னை சென்ட்ரல் தோழியுடன் தங்கியிருந்த நர்ஸ் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த லாட்ஜ் ஊழியரை போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலத்தைச்சேர்ந்த 23 வயது பெண் பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இவர் தோழியுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று விட்டு கடந்த 04.01.2026 அன்று காலை தோழியுடன் சென்னை சென்ட்ரல் வந்து N.H ரோட்டில் உள்ள லாட்ஜில் தங்கியுள்ளார்.
பெண் பாத்ரூமில் குளிக்க சென்ற போது, ரூம் பாய் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார். இதனை கவனித்த பெண்ணின் தோழி சத்தம் போட்டுள்ளார், குளித்து கொண்டிருந்த பெண் வெளியே வந்து பின்னர் இருவரும் சேர்ந்து அந்த நபரிடம் செல்போனை பிடுங்கி பார்த்த போது, அவர் எடுத்த வீடியோவை டெலிட் செய்ததும், ஏற்கனவே வேறு ஒரு பெண் குளிக்கும் வீடியோ காட்சி பதிவாகியிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) மற்றும் IT Act ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த தனஞ்செய் பதி, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட தனஞ்செய் பதி விசாரணைக்குப் பின்னர் நேற்று (04.01.2026) நீதின்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
What's Your Reaction?

