”நான் எவ்வளவு செய்தேன் உங்களுக்கு...” மக்களிடம் ஜெ.ஜெயவர்தன் உருக்கமான பிரசாரம்!

மத்திய அமைச்சரை ஒரு முறை கூட சந்திக்காதவர்தான் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் -ஜெ.ஜெயவர்தன்

Apr 4, 2024 - 06:11
”நான் எவ்வளவு செய்தேன் உங்களுக்கு...” மக்களிடம் ஜெ.ஜெயவர்தன் உருக்கமான பிரசாரம்!

அ.தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெ.ஜெயவர்தன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அம்ரூத் திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் நிதி பெற்று புதிய பூங்காக்களை தென்சென்னையில் அமைத்தேன் எனக்கூறி மக்களிடம் வாக்குசேகரித்தார். 

தென்சென்னை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினராக தான் 2014 முதல் 2019 வரை பணியாற்றிய போது அம்ரூத் திட்டத்திற்காக நிதி பெற்று, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு பூங்காக்களை அமைத்தேன் என தெரிவித்தார். 

ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனது 5 ஆண்டு காலத்தில் அம்ரூத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசவே இல்லை, மத்திய அமைச்சரை ஒரு முறை கூட சந்திக்காதவர்தான் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் என குற்றம்சாட்டினார்.

அத்துடன், அம்ரூத் திட்டத்தின் மூலமாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, அதற்காக வலியுறுத்தி மத்திய அமைச்சரை சந்தித்து நிதி பெற்று கோயம்பேட்டில் புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.  இதனால், தென்சென்னை தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்த
இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow