கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஈரானிய மீன்பிடி படகை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை!
12 மணி நேர துரத்தலுக்குப் பின் கடற்கொள்ளையர்கள் சரணடைந்த நிலையில் படகில் இருந்த 9 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரபிக்கடலில் மீன்பிடி படகை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களை கைது செய்த இந்திய கப்பற்படை அதிலிருந்த 23 பாகிஸ்தானியர்களை பத்திரமாக மீட்டுள்ளது.
இஸ்ரேலுடனான மோதலில் ஹமாஸுக்கு உதவுவதற்காக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இந்திய, அரேபிய மற்றும் செங்கடல்களில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களைத் தாக்கி வருவதோடு கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி கடற்கொள்ளையர்களும் சரக்கு கப்பல்களை கடத்துவது, கொள்ளையடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரபிக்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் 23 பாகிஸ்தானியர்களுடன் சென்ற ஈரானைச் சேர்ந்த மீன்பிடி படகை மறித்த கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களை காண்பித்து கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மீன்பிடி படகில் இருந்து உதவி கோரி பேரிடர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமேதா மீட்பு பணிக்கு விரைந்தது. 12 மணி நேர துரத்தலுக்குப் பின் கடற்கொள்ளையர்கள் சரணடைந்த நிலையில் படகில் இருந்த 9 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு மீன்பிடி படகில் இருந்த 23 பாகிஸ்தானியர்களையும் இந்திய கப்பற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
What's Your Reaction?