கொட்டித்தீர்க்கப்போகும் தென்மேற்குப் பருவமழை.. இயல்பை விட அதிகமாம்.. இந்திய வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக பெய்யும். ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை காலத்தில் நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக புவி அறிவியல் அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.

Apr 17, 2024 - 12:02
கொட்டித்தீர்க்கப்போகும் தென்மேற்குப் பருவமழை.. இயல்பை விட அதிகமாம்..  இந்திய வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்


நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுட்டெரித்து வருகிறது.  இனி வரும் நாட்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அக்னி நட்சத்திர காலத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று மக்கள் அஞ்சத் தொடங்கியிருக்கும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளது.

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதோடு, இயல்பை விட மழை அதிகமாக இருக்கும் என்பது மக்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.

இந்நிலையில், நடப்பாண்டு நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை 106% வரை பெய்யும் என்றும், தென்மேற்கு பருவமழை காலத்தில் நீண்ட கால சராசரிப்படி 87 செ.மீ. மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதனிடையே இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையின் போது நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 2024 தென்மேற்குப் பருவமழை குறித்து விளக்கமளித்தார். நீண்ட கால சராசரியில்  106% ஆக இருக்கும் என்றும், இது 5% கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 1971-2020 தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் பருவகால மழையின் நீண்டகால சராசரி 87 செ.மீ.

இந்த முன்னறிவிப்பு இயக்கவியல் மற்றும் புள்ளிவிவர மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், வடமேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றும் டாக்டர் ரவிச்சந்திரன் கூறினார். 

வடக்கு அரைக்கோளத்தில் இயல்பை விட குறைவான பனி உறைவு, 2024 தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழைக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களில்  அதாவது ஜனவரி முதல் மார்ச் 2024 வரை வடக்கு அரைக்கோளத்தில் பனிப்பொழிவு இயல்பை விட குறைவாக இருந்தது, இது இந்தப் பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவைக் குறிக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் மொஹபத்ரா தெரிவித்தார். 

வடக்கு அரைக்கோளம் மற்றும் யூரேசியா முழுவதும் குளிர்கால மற்றும் வசந்த கால பனி பரப்பளவு பொதுவாக அடுத்தடுத்த பருவ மழையுடன் தலைகீழ் தொடர்பைக் கொண்டுள்ளது. 2024 மே கடைசி வாரத்தில் பருவ மழை குறித்த கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என்று அவர் கூறினார்.

மேற்கண்ட கணிப்புகளின் தொடர்ச்சியாக, முறையே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்து வரும் ஒரு மாதத்திற்கான மாதாந்திர மழை முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது. கூடுதலாக, நாடு முழுவதற்குமான மழை அளவு முன்னறிவிப்புகளும், பருவத்தின் இரண்டாம் பாதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) மழைப்பொழிவின் அளவும் ஆகஸ்ட் மாத முன்னறிவிப்புடன் ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படுகின்றன. 2024, மே  கடைசி வாரத்தில் பருவ மழைக்கான அப்டேட் குறித்த கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow