நடிகர் விஷால் 'திவாலானவர்' என அறிவிக்க தயாரா : நீதிபதிகள் கேள்வி 

லைகா நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.21 கோடியை 30% வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும் என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகர் விஷால் திவாலானவர் எனவும் அறிவிக்க தயாரா என நீதிபதிகள் கேள்வி எனுப்பியுள்ளனர்.

நடிகர் விஷால் 'திவாலானவர்' என அறிவிக்க தயாரா : நீதிபதிகள் கேள்வி 
நடிகர் விஷால் வழக்கு

நடிகர் விஷால், தனது விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொண்டுஇருந்தது.

இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பித் தர விஷாலுக்கு உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே? என விஷால் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஶ்ரீராம், "15 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம்" எனக்கூறினார். வட்டி தொகை மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வருவதாகவும் வாதிட்டார்.

மேலும், லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், "அப்படியானால் விஷால் 'திவாலானவர்' என அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா?" எனவும் அவரது தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். மேலும், 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம் எனவும் இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow