கிணற்றில் நீச்சல் பழகியபோது விபரீதம்.. 2 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு.. பெற்றோர்களே கவனம்…

Apr 29, 2024 - 17:18
கிணற்றில் நீச்சல் பழகியபோது விபரீதம்.. 2 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு.. பெற்றோர்களே கவனம்…

வேலூர் அருகே, கிணற்றில் நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த தாயும், அவரது 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரை அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் பவித்ரா என்பவருக்கும் திருமணமாகி, 9 வயதில் ரித்திக் என்ற மகனும், 7 வயதில் நித்திகா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். அழகான, அமைதியான இந்த குடும்பத்தை இப்படி ஒரு சோகம் தாக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், ரித்திக்கும், நித்திகா ஸ்ரீயும் வீட்டிலேயே இருந்தனர். அவர்களை தாயார் பவித்ரா அடிக்கடி அருகில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று வழக்கம்போல் நீச்சல் பழகுவதற்காக மூவரும் கிணற்றுக்குச் சென்றிருந்தனர். அங்கு உற்சாகமாக நீச்சல் பழகிக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக 3 பேரும் நீரில் மூழ்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த உறவினர்கள், அவர்களை தேடி கிணற்றுக் சென்றனர். அப்போது பவித்ரா, ரித்திக், நித்திகா ஸ்ரீ ஆகிய மூவரும் கிணற்றுக்குள் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வேப்பங்குப்பம் காவல் துறையினர் மற்றும் ஒடுக்கத்தூர் தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.

தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். 

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், குளிப்பதற்காக நீர்நிலைகளுக்கு செல்லும் மாணவர்கள், நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. எனவே, விடுமுறை நாட்களில் மாணவர்களை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow