கொத்து கொத்தாய் இறக்கும் காகங்கள் : சென்னையில் பரவும் பறவைக் காய்ச்சல்? மத்திய அரசு எச்சரிக்கை
தலைநகர் சென்னையில் காகங்கள் மர்மமான முறையில் தொடர்ந்து உயிரிழந்து வருகிறது. பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு நடப்பதாக தெரியவந்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. இறந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர், கடந்த மாதத்தில் சேகரித்து போபாலில் உள்ள தேசிய விலங்கள் நோய் கட்டுபாட்டு ஆய்வு நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பினர்.
இந்நிலையில், இந்த சோதனைகளின் முடிவில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு, மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் அனுப்பி உள்ளது.
மேலும், திடீரென இறக்கும் பறவைகள் குறித்து கால்நடை பராமரிப்பு துறைக்கு மக்கள் தகவல் அளிக்க வேண்டும் எனவும், வெறும் கைகளால் காகம் உள்ளிட்ட இறந்த விலங்குகளை தொட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சல் பாதித்து உயிரிழந்த காகம் உள்ளிட்ட பறவைகளை 8 அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் அலார்ட் செய்யப்பட்டுள்ளது. இது கோழிகளுக்கும் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளதா என பண்ணைகளில் தீவிர சோதனை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
What's Your Reaction?

