திருமணம் செய்துக் கொள்ளாதது என்னுடைய தேர்வு: சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக டாக்டர் அமுதா தற்போது செயல்பட்டு வருகிறார். குமுதம் சிநேகிதி இதழுக்காக அமுதா அளித்த பிரத்யேக நேர்க்காணல் விவரங்களின் பின்வருமாறு

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பொறுப்பிற்கு (கூடுதல் பொறுப்பு) முதல்முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற போதே யார் அவர் என பலர் தெரிந்துக் கொள்ள முயன்றனர். அவரின் பெயர் அமுதா. உலக வானிலை நிறுவனத்திடமிருந்து பேராசிரியர் டாக்டர் வில்ஹோ வைஷாலா விருது பெற்ற, இந்திய வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஒரே பெண்மணியும் இவரே! ‘குமுதம் சிநேகிதி’ சார்பாக அமுதா அவர்களிடம் பேசினோம்...
பள்ளி எப்படித் தங்கள் கனவுக்குக் களம் அமைத்துக்கொடுத்தது?
‘‘எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் எல்லோருமே நல்ல வழிகாட்டுதல் கொடுத்தனர். அவர்களின் ஆத்மார்த்தமான பணியைக் கண்டு நாங்களும் நிறைய கற்றுக்கொண்டோம். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை, புரசைவாக்கத்தில் உள்ள ‘சீமாட்டி முத்தையா செட்டியார் பள்ளி’யிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பை, வேப்பேரியில் உள்ள ‘பென்டிங் உயர்நிலைப் பள்ளி’யிலும் படித்தேன். இரண்டுமே அரசு உதவிபெறும் பள்ளிகள்தான். நான் பட்டப்படிப்பில் இயற்பியல் பாடத்தை தேர்வுசெய்வதற்குக் காரணமே என்னுடைய ஆசிரியர்கள்தான்.’’
வானியல் துறையில் தங்களுக்கு ஆர்வம் வருவதற்கு இயற்பியல்தான் காரணமா?
‘‘என் பெற்றோர், ‘பொருளாதார ரீதியாக பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கவேண்டும்’ என்ற எண்ணம் கொண்டவர்கள். படிப்பின் முக்கியத்துவம் குறித்து என்னிடம் எடுத்துரைப்பார்கள். பி.எஸ்சி இயற்பியல் பாடத்தைத் தகுதியாகக் கொண்டு, ‘ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வு’ எழுதியதன் விளைவாக, வானிலை மையத்தில் ‘சீனியர் அப்சர்வர்’ என்ற பணி கிடைத்தது. வேலையில் சேர்ந்தபோது எம்.எஸ்சி (இயற்பியல்) முடித்திருந்தேன். வானிலை மையத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில் குடிமைப் பணியியல் போட்டித் தேர்வு மூலமாக வானிலை விஞ்ஞானியாக (கெசெடெட்) தேர்ந்தெடுக்கப்பட்டேன். பிறகு, பல பதவி உயர்வுகள். இப்படித்தான் ஒரே துறையில் கிட்டத்தட்ட 34 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறேன். இடையில், 6 ஆண்டுகள் மட்டும் புனேவில் பணியாற்றினேன்.’’
புதிதாக ஒரு துறைக்குள் நுழைந்தபோது, உடன் பணியாற்றுபவர்களின் ஆதரவு கிடைத்ததா?
‘‘எங்கள் துறையில் அப்போதே பல பெண்கள் இருந்தனர். குறிப்பாக, விமான ஊர்தி நிலையத்தில் காலநிலை குறித்து அறிவதற்கான ஒரு மையம் இருக்கும். அங்கு 3 ஷிஃப்ட்களில் பெண்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது எண்ணிக்கைக் குறைவாக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புதிதாக வேலையில் சேரும் பெண்களுக்கு சக பணியாளர்கள் அனைவருமே மிகவும் ஆதரவாக இருப்பார்கள்.’’
தென் மண்டல தலைவர் பதவிக்குத் தேர்வானவுடன் தங்கள் மனநிலை என்ன?
‘‘நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், அதேநேரம், இது கூடுதல் பொறுப்பு. இதில் திறம்பட செயலாற்றவேண்டும் என்ற உத்வேகமும் பிறந்தது.’’
இந்தப் பொறுப்பிற்குத் தாங்கள் தேர்வானவுடன் கிடைத்த மிகவும் சிறப்பான வாழ்த்து எது?
‘‘என் தந்தையாரின் கிராமத்திலிருந்து, பலரும் அலைபேசியில் அழைத்து, வாழ்த்து கூறினார்கள். அதேபோன்று, பள்ளியில் என்னோடு படித்த சக மாணவிகளும் வாழ்த்து தெரிவித்தார்கள். தவிர, என்னிடம் பயிற்சி பெற்ற (Internship) இளம் கல்லூரி மாணவமணிகளும் அழைத்து, ‘நீங்கள்தான் எங்கள் ரோல் மாடல்’ என்று நெகிழ்ச்சியாகக் கூறி, வாழ்த்து தெரிவித்தார்கள். குடும்பத்திற்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற வாழ்த்துகள் கிடைத்ததை மறக்கவே முடியாது.’’
பெண்களின் முன்னேற்றத்தில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு என்றாலும், இன்னமும் இங்கு இடைநிற்றல்கள் அதிகம் நிகழ்கின்றன. ‘பெண் கல்வி’ குறித்து தாங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
‘‘பெண்களுக்கு மிகவும் அடிப்படையான முதல் தேவை, கல்வி. ‘எப்படியாவது படித்துவிட வேண்டும்’ என்பதை மட்டும் பெண்கள் மனதில் கொள்ளவேண்டும். முன்பாவது பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி, பெண்களைப் பள்ளியை விட்டு நிறுத்தும் சூழல் இருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு, பெண்பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்காகப் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.
ஒருவேளை, படிப்பை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டாலும்கூட, ‘தொலைதூரக் கல்வி’ மூலமாக அவர்கள் கல்வி பயில வேண்டும். அண்மையில்கூட, கூலி வேலை பார்த்துக்கொண்டு ஒரு மாணவி, வேதியியல் துறையில் பி.எச்டி பட்டம் பெற்றுள்ளார். ‘நான் படிக்கவேண்டும்’ என்று அந்த பெண் கூறியதை காதுகொடுத்து கேட்டு, அவருடைய கணவரும் பக்கபலமாக இருந்து, இயன்றதைச் செய்துள்ளார். எனவே, படிப்பு என்பதை நம் குடும்பத்தினரிடம் நாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.’’
‘பாலின பாகுபாடு’ என்பது நீர்த்துப் போனாலும்கூட, இன்னமும் இருக்கிறதுதானே?
‘‘உண்மைதான். ஆனால், முன்பிருந்த அளவுக்கு தற்போது இல்லை எனலாம். பெண்கள் மிகவும் அமைதியாக தங்கள் வேலையில் திறம்பட பணியாற்றினால்கூட, அவர்களுக்கான அங்கீகாரம் தற்போது கிடைக்கவே செய்கிறது. பெண்கள் தங்கள் உழைப்பைச் செலுத்தி, திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்திவந்தால், இன்னும் சில ஆண்டுகளில் நிச்சயம் 'பாலின பாகுபாடு’ என்பது மறைந்துவிடும்.’’
சமகாலத்தில் வானிலை குறித்து பேசும்போது, அதில் பயன்படுத்தும் கருவிகள் தொடர்ந்து விவாதப் பொருளாகவே உள்ளன. குறிப்பாக, AWS எனப்படும் தானியங்கி வானிலை நிலையங்கள் நம்மிடம் போதுமான அளவு உள்ளனவா?
‘‘நான் இந்தத் துறையில் (AWS) தான் நீண்ட காலம்... அதாவது, புனேவில் இருந்த காலம் தொட்டே பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். இது, சற்று விலாவாரியாகப் பேச வேண்டிய விஷயம். இந்திய வானிலை ஆய்வு மையம் ஒருங்கிணைக்கப்பட்டபோது (1875) நம்மிடம் 77 தரைநிலை வானிலை நிலையங்கள் மட்டுமே இருந்தன. இந்தத் துறையில், 2006-ம் ஆண்டு ‘நவீனமயமாக்கல்’ நிகழ்ந்தது. இதன் ஒரு பகுதியாக தானியங்கி வானிலை நிலையங்களை அதிகரிக்கும் திட்டம் இருந்தது. நான் இந்தத் திட்டத்தின் இயக்குனராகப் பணியாற்றினேன்.
இந்தத் திட்டத்தின்படி, ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் ஒரு தானியங்கி வானிலை நிலையம் மற்றும் இரண்டு தானியங்கி மழைமானி நிலையங்கள் இருக்கவேண்டும் என வரையறுக்கப்பட்டது. தற்போது, இந்தியா முழுக்க 1,000-க்கும் மேற்பட்ட தானியங்கி வானிலை நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 65 ஆக உள்ளது. தற்போது, மாநில அரசின் அமைப்புகளான சென்னை மாநகராட்சியும் AWS-களை அமைத்து வருகின்றன. அதன் மூலமாகக் கிடைக்கும் தரவுகளை மாநில அரசு நமக்குப் பகிர்கிறது. நாமும் வானிலை குறித்த தரவுகளை மாநில அரசுடன் பகிர்கிறோம்.’’
இதேபோன்று, ரேடாரின் Downtime குறித்தும் விமர்சனங்கள் உள்ளதே?
‘‘400 கிலோ மீட்டருக்கு ஒரு ரேடார் இருந்தால்தான் புயலைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். அந்த வகையில்தான் காரைக்காலில் ஒரு S-BAND ரேடாரும், சென்னையில் ஒரு S-BAND, ஒரு X- BAND என இரு ரேடார்களும் வைத்துள்ளோம்.
நீங்கள் கேட்ட, ‘டவுன்டைம்’ பொருத்த வரை, ஒரு ரேடார் வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் செலவாகிறது. சென்னையில் 2002-ம் ஆண்டு அமைத்த ரேடார் தற்போது வரை திறம்பட செயலாற்றி வருகிறது. பொதுவாக, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ரேடார்களை மெயின்டனன்ஸ் செய்கிறோம். அப்படி இருந்தும், சில நேரங்களில் நீங்கள் சொல்வதுபோல் ‘டவுன்டைம்’ எனப்படும் செயல்படாமல் இருக்கும் தன்மை ஏற்படுகிறது. இதை நிச்சயம் தவிர்க்கமுடியாது. குறிப்பாக, இது, புயல் அல்லது மழைக்காலத்தில் நிகழும்போது, விவாதப் பொருளாக மாறுகிறது. அத்தகைய ஒரு சூழலைத் தவிர்க்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.’’
தங்களுடைய பரந்துபட்ட அனுபவத்தின்படி, காலநிலை மாற்றம் குறித்து சொல்லுங்களேன்...
‘‘காலநிலை மாற்றம் என்பது தவிர்க்க முடியாத அச்சுறுத்தல் என்று உலக வானிலை நிறுவனமே தெரிவித்துள்ளது. அதற்கேற்றபடி நம்மைத் தகவமைத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. உதாரணத்திற்கு, வடகிழக்கு பருவமழை என்றால், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 92 நாள்கள் என நாம் வரையறுத்துள்ளோம். இதில், 25 நாள்கள் ‘மழை நாள்கள்’ என வைத்துக்கொள்வோம். ஆனால், தற்போது என்ன நிகழ்கிறதென்றால், 4 நாள்களில் பெய்யவேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்க்கிறது.’’
இதை முன்கூட்டியே கணிக்க முடியாதா?
‘‘தற்போது செயற்கைக்கோளிலிருந்து 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு புகைப்படம் கிடைக்கிறது. 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரேடார் நமக்கு தகவல் அளிக்கிறது. உதாரணத்திற்கு, இந்தத் தகவலை அடிப்படையாக வைத்து, 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று நாம் சொன்னால், 35 சென்டிமீட்டருக்கு அதிகமாகக்கூட மழை பெய்கிறது. துல்லியமாக இவ்வளவு சென்டிமீட்டர் மழை பெய்யமுடியும் என்று கூறுவதற்கான தொழில்நுட்பம், நம்மிடம் மட்டுமல்ல; உலகில் எந்த நாட்டிடமும் இல்லை.’’
வடகிழக்கு பருவமழை என்றதும் நினைவுக்கு வருகிறது... நீங்கள் இது தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டீர்கள் அல்லவா?
‘‘ஆம்! ‘வடகிழக்கு பருவமழையின் சிறப்பு இயல்புகள்’ என்பதுதான் என்னுடைய ஆய்வுக்கட்டுரை. வானியல் நிபுணர் வை.ஈ.ஏ.ராஜ் என்பவரின் வழிகாட்டுதலின் படிதான் அந்த ஆய்வை மேற்கொண்டேன். பல்வேறு நவீன உபகரணங்கள் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் என் ஆய்வு அமைந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையின் தென்மேற்கு பகுதியில்தான் அதிக மழை பெய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு அந்த ஆய்வு காரணமாக அமைந்ததில் மகிழ்ச்சி.’’
எல்லா துறையிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்’ (AI) ஆதிக்கம் செலுத்துகிறது. வானிலையில் அது எந்த அளவுக்கு இருக்கிறது?
‘‘எங்கள் துறையிலும் அதற்கான ஆய்வுகளைத் தொடங்கிவிட்டார்கள். டெல்லியில் இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. தற்போது, இது எங்கள் அலுவலகத்திற்குள் நடைபெறும் ஆய்வுகளாக உள்ளது. அதாவது, இதன் வெற்றி விகிதத்தைக் கணக்கிட்டு வருகின்றனர். வருங்காலத்தில் இதன் வெற்றி விகிதம் போதுமான அளவு இருக்கும் பட்சத்தில், நிச்சயமாக AI-யைப் பயன்படுத்துவோம்.’’
தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புகளில் உண்மைத்தன்மை உள்ளதா?
‘‘அரசு மற்றும் இணையத்தில் கிடைக்கும் வானிலை குறித்த தரவுகளை ஆராய்ந்து, அவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறுகிறார்கள். இதன் அடிப்படையிலேயே நொடிக்கு நொடி அவர்கள், சமூக வலைதளங்களில் பேரிடர் காலத்தில் அப்டேட்’ கொடுக்கிறார்கள். ஆனால், நாங்கள் அதுபோல் கொடுக்க இயலாது. காரணம், எங்கள் அறிவிப்புகள் முழுக்க முழுக்க அதிகாரப்பூர்வமானவை. நாளை, மத்திய மாநில அரசுகள் அல்லது பொதுமக்கள் RTI-ல் தகவல் கேட்டால், நாங்கள் அவற்றை அளிக்கவேண்டும். எங்களுக்கென்று சில வழிகாட்டு நெறிமுறைகளும் பொறுப்புகளும் உள்ளன. அதன்படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தனி நபர்களுக்கும் அரசு சார்ந்த நிறுவனத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு.’’
சூப்பர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் குறித்து சொல்லுங்கள். இந்தியாவுக்கென தனி வானிலை மென்பொருள் உள்ளதா?
‘‘எங்கள் டெல்லி அலுவலகத்தில் இதற்கென முழுமையான தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ உள்ளது. இது தவிர, மத்திய புவிசார் துறையின் கீழ் இயங்கும் IITM (Indian Institute of Tropical Meteorology), NCMRWF போன்றவை அளிக்கும் தரவுகளையும் நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். இந்தியாவிற்கென்று வானிலை குறித்த மென்பொருள் உள்ளது. அதை இன்னும் மேம்படுத்தி வருகிறோம்.’’
பணியில் தாங்கள் சந்தித்த சவால்கள்?
‘‘புதிய உபகரணங்களைப் புரிந்துகொள்வது, நிர்வாக சிக்கல்களைக் கையாள்வது ஆகியவைதான் முக்கிய சவால்கள். அதேநேரம், ஏதேனும் பயிற்சிக்காக வெளியூர் முகாம்களுக்குச் சென்றால், அங்கு தங்கும் இடங்களில் பெண்களுக்கான வசதிகளில் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.’’
தங்கள் குடும்பம் பற்றி பகிரலாமா?
‘‘பொதுவாகவே, ‘சாதனைப் பெண்கள்’ என்றாலே, அவர்கள் திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. இது, என்னுடைய தேர்வு. கிடைக்கும் நேரத்தில், எனக்குப் பிடித்த வேலைகளைச் செய்து கொள்கிறேன், சொந்த பந்தங்களுடனும் அவர்கள் குழந்தைகளுடனும் செலவிடுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது, சுற்றுலா சென்று, மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் வாழ்ந்துவருகிறேன்.
இன்னொரு விஷயம்... 50 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டில் ‘குமுதம்’ வாங்குகிறோம். ஒரு நாள் தாமதமானால்கூட, செய்தித்தாள் போடுபவரிடம், ‘குமுதம் எங்கே?’ என்று விசாரித்து, எங்கள் அம்மா எப்படியேனும் வாங்கிவிடுவார்!’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார், அமுதா.
(கட்டுரையாளர்: ராணி கார்த்திக்/ சிநேகிதி இதழ்/ 17.04.2025)
What's Your Reaction?






