புதுக்கட்சி தொடங்குவது உறுதி: அடம் பிடிக்கும் அண்ணாமலை, டீல் பேசும் பாஜக
தனது பிறந்தநாளில் புதுக்கட்சி அறிவிப்பை வெளியிடுவது என்பதில் அண்ணாமலை உறுதியாக உள்ளார். ஆனால் அவரை சமாதானப்படுத்தி பாஜகவில் நீடிக்க வைக்க டெல்லி தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்ட பிறகு அரசியலில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை மெளனம் காத்து வந்தார். பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினரில் இருந்து அண்ணாமலை விலகி, இளைஞர்களை மையப்படுத்திய புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கப் போவதாக கூறப்பட்டு வந்தது.
இதற்கான அறிவிப்பை ஜூன் 4 தனது பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 2 நாட்கள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்ற அண்ணாமைலை, அங்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், அமித் ஷா, நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாக நேரம் ஒதுக்க கோரியிருந்தார்.
இன்றைய தினம் பி.எல்.சந்தோஷ்., நிதின் நபின் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசினார். அவர்களிடம், தான் புதிதாக கட்சி தொடங்க உள்ளதை தெரிவித்து, பாஜகவிலிருந்து விலகுவது தொடர்பாக அண்ணாமலை பேசியிருக்கிறார். இந்த சந்திப்பின் போது பாஜகவில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அண்ணாமலையிடம் பாஜக தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக டெல்லி தலைவர்களிடம் அண்ணாமலை தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.
அண்ணாமலையின் சொந்த அமைப்பான 'வீ தி லீடர்ஸ்' உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி, 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற பெயரில் புதிய இளைஞர் இயக்கத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம். இது முதலில் சமூக இயக்கமாகத் தொடங்கப்பட்டு, பின்னர் அரசியல் கட்சியாக மாற்ற அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
What's Your Reaction?