இந்த நேரத்தில் யாரும் வெளியே வராதீங்க - மத்திய சுகாதாரத்துறை, 21 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை மையம்
நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதே நேரம் 21 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பதிவில், வெய்யில் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செல்ல வேண்டாம். பிற்பகலில் வெளியே இருக்கும்போது ஓடுவது, கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். கண்டிப்பாக செருப்பு அணிந்து செல்ல வேண்டும். கோடை வெய்யில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரத்தில் வீட்டில் சமைப்பதைத் தவிர்க்கவும். சமையலறை போதுமான காற்றோட்டத்துடன் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வைத்திருக்க வேண்டும்.
மது, தேநீர், காபி, செயற்கை பானங்கள் அல்லது அதிக சர்க்கரை கொண்ட பானங்களைத் தவிர்க்கவும். அதிக புரதச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். பழைய உணவை உண்ண வேண்டாம். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றைச் சாப்பிடலாம். நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையும் செல்லப்பிராணிகளையும் விட்டுச் செல்ல வேண்டாம். யாருக்கேனும் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தாலோ அல்லது வெப்பத்தால் மயக்க நிலைக்கோ, குழப்பமான மனநிலைக்கோ சென்றால் உடனடியாக 108 அல்லது 102 என்ற அவசர எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும்.
21 மாவட்டங்களுக்கு கனமழை
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை உள்பட 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 3 அல்லது 4 தினங்களில் தொடங்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?