உருப்படியாக எதுவும் இல்லை எடப்பாடி: ஜூலையில் பிரமாண்ட பட்ஜெட் ஸ்டாலின்
இடைக்கால பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜூலையில் பிரமாண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு எப்படி காது குத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறோம். 2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 4-ல் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை.
கடந்த 5 ஆண்டுகளைப் போல இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனாமினுக்கி உரையாகத்தான் இருக்கிறது; உருப்படியாக எதுவும் இல்லை. அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும். உற்றுப்பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும்.
இதற்கு உதாரணம் இந்த நிதிநிலை அறிக்கை; வரவு செலவு திட்டம் பற்றி உருப்படியாக எதுவும் இல்லை. நிதி நிலைமையை சரிசெய்ய ரகுராம் ராஜன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு தான் கடன் அதிகரித்துள்ளது. மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.26,000 கோடி குறைந்துள்ளது.
மத்திய அரசை குற்றம்சாட்டும் நிதி அமைச்சர் மாநில அரசின் வருவாய் குறைந்தது பற்றி பேசவில்லை. வேளாண் பட்ஜெட் என்று விவசாயிகளை ஏமாற்றுகின்ற பட்ஜெட்டை போட்டு உள்ளார்கள்.அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ரூ.26,000 கோடி அளவுக்கு மாநில அரசின் வரி வருவாய் குறைந்துள்ளது.
நிதிநிலையை சீரமைக்க நிபுணர் குழு அமைத்த பிறகே தமிழக அரசு அதிக கடனை வாங்கியுள்ளது. நிதிப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே சென்றால் மக்கள் மீது வரிச்சுமை ஏற்படும். வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றும் ஒரு பட்ஜெட்டை தாக்கல செய்துள்ளனர். நிதிநிலை அறிக்கையில் வரவு - செலவு திட்டம் பற்றி உருப்படியாக எதுவும் இல்லை.
ஆண்டுக்கு 100 நாள் சட்டசபை நடக்கும் என்று கூறினார்கள் மொத்தமாகவே 140 நாள் தான் நடத்தினார்கள். வேளாண்துறையில் நீர்வளத்துறையை சேர்த்தது ஏன்? வேளாண் பட்ஜெட் ஒரு ஏமாற்று பட்ஜெட். கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஜூலையில் பிரமாண்ட பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்! ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்
ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?

