சவுதியில் கடும் வெப்பம் - ஹஜ் பயணத்தின்போது 550 பேர் மரணமடைந்ததாக தகவல்

ஹஜ் பயணத்தின்போது வெயில் தாக்கத்தால் இதுவரை 550 பயணிகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவலினை பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Jun 19, 2024 - 19:15
சவுதியில் கடும் வெப்பம் - ஹஜ் பயணத்தின்போது 550 பேர் மரணமடைந்ததாக தகவல்

ஹஜ் பயணத்தின்போது வெயில் தாக்கத்தால் இதுவரை 550 பயணிகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவலினை பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஹஜ் என்பது உலகின் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றாகும் மற்றும் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வருடாந்திர திருவிழாவாகும். சவுதி அரேபியாவின் புள்ளிவிபர ஆணையத்தின்படி, இந்த ஆண்டு 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹஜ்ஜில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக நீர்ச்சத்து இழந்து பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை நிலவி வருவதன் காரணமாக அதனைத் தாக்குப்பிடிக்கும் வகையில் மக்கள் அதிகப்படியான நீர் பருகவும், தன்னை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பினும், ஹஜ் பயணத்தின்போது வெயில் தாங்க முடியாமல் இதுவரை 550 பயணிகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவலினை பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள் ஆவார். 60 ஜோர்டானியர்கள் இறந்துள்ளனர். ஹஜ் கூட்ட நெரிசலின்போது பலத்த காயங்கள் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததைத் தவிர மற்ற அனைவரும் வெப்பத்தின் தாக்கத்தால் இறந்துள்ளனர். 

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவுவதால், இந்த மாதம் 15ஆம் தேதி முதல் கட்டாய மதிய ஓய்வு இடைவேளை சட்டம் அமுலுக்கு வருவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும், செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தின்படி, நண்பகல் 12 மணிமுதல் மாலை 3 மணி வரை நேரடியாக திறந்த வெளியில் அல்லது சூரிய ஒளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டாயமாக இடைவேளை கொடுக்க வேண்டும். அவர்கள் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது. எங்கேனும் இந்த சட்டம் மீறப்பட்டால், 19911 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சவூதி அரேபிய பாதுகாப்புப் படைகள் 1,600 க்கும் மேற்பட்ட பணியாளர்களை சிறப்பு மருத்துவப் பிரிவுகள் மற்றும் 30 விரைவு நடவடிக்கை குழுக்களுடன் மக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக ஹஜ் பயணிகளின் அவசர சூழ்நிலைகளைச் சமாளிக்க அனுப்பியுள்ளனர்.

மேலும், சுமார் 5,000 தன்னார்வலர்கள் மற்ற சுகாதார மற்றும் முதலுதவி நடவடிக்கைகளில் பங்கேற்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow