“எல்லாமே பேட்ச் வொர்க்,.... அரசு கட்டித்தந்த வீட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?” -  குற்றம்சாட்டும் சிபிஎம்

‘மாவீரன்’ படத்தில் வருவது போல் சுவற்றை சுரண்டினால்,.....

Oct 25, 2024 - 00:37
“எல்லாமே பேட்ச் வொர்க்,.... அரசு கட்டித்தந்த வீட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?” -  குற்றம்சாட்டும் சிபிஎம்

தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட 1044 குடியிருப்புகள் தரமற்ற முறையில் உள்ளதாக சிபிஐஎம் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை, வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியின்போது அப்போதைய தமிழக அரசால் 1044 அடுக்குமாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. எனினும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.  சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மூலம் அங்கீகாரம் வழங்கப்படாததால்,  கட்டடம் பயன்பாட்டுக்கு கொடுக்காமல் இருந்தநிலையில்,  திமுக ஆட்சி வந்த பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் காணொளி காட்சி மூலமாக  அக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. 

இதில் சாலையோரம் ஆக்கிரமிப்புகளில் உள்ள பொதுமக்கள் வில்லிவாக்கம் பகுதியில் இருந்து குடியமர்த்தப்பட்டனர். அதேபோல் ராமதாஸ் நகர் பிரிவில் தோட்டம், பால் டிப்போ ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு கட்டடத்தில் குடியிருப்புகள் வழங்கப்பட்டது. 

இவ்வாறிருக்க, தற்போது பெய்த கனமழைக்கு பிறகு கட்டடத்தில் மழைநீர் தேங்கி உள்ளதாக  அங்கு வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டினர்.  அதோடு, ‘மாவீரன்’ படத்தில் வருவது போல் சுவற்றை சுரண்டினால் சிமெண்ட் கலவை  கையோடு வருவதாகவும் தரை ஓட்டையாக உள்ளதாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறினர்.

இதனையடுத்து அங்கு வீடுகளைப் பார்வையிட வந்த சிபிஎம் நிர்வாகிகளான வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் லோகநாதன் மற்றும் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக, சிபிஎம் நிர்வாகிகள் வீடுகளின் தரத்தை ஆய்வு செய்து அதிகாரிகள் மூலம் கட்டடங்களுக்கு  தர சான்றிதழ் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும், லிஃப்ட்கள், வீட்டில் உள்ள சுற்றுச்சுவர்கள், தரைதளம் ஆகிய பகுதிகள் தரமற்றதாகவும், இங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் உள்ளதாகவும்  குற்றச்சாட்டை முன்வைத்தனர்.