அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம் உரிமைத்தொகை - முன்னாள் அமைச்சர் உறுதி

அதிமுக ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து தற்போதுள்ள முதலமைச்சர் கருப்பு சட்டை போட்டு கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். தற்போது அவரே அந்த மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளார்.

Oct 7, 2024 - 14:15
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம் உரிமைத்தொகை - முன்னாள் அமைச்சர் உறுதி

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தெற்கு ஒன்றியம் மற்றும் நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் அம்மா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக துணை பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சரும்,  எம்.எல்.ஏவுமான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியபோது, திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 520 பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து ஆட்சிக்கு வந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு அமைச்சர் 80% சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறுகிறார். அதற்கு அடுத்து, இன்னொரு அமைச்சர் இல்லை, இல்லை. அவர் சொல்வது பொய் நாங்கள் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று சட்டசபையில் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவர் பேச்சையும் மறுத்து முதல்வர் ஸ்டாலின் பேசும்போது இவர்கள் இருவரும் சொல்வது தவறு 100% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். தற்போது சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்காக ஆட்சி நடத்தி வருகிறோம் என்று பொய்யான தகவலை சொல்கிறார் முதல்வர்.

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்பத் தலைவிகள் பெற்று வரும் மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக வழங்கப்படும்.குடும்பத் தலைவிகளுக்கு வழங்கிய உதவித்தொகை பாதி பேருக்கு வழங்கிவிட்டு மீதி பேருக்கு வழங்காமல் ஏமாற்றிய அரசு திமுக அரசு. அதிமுக அரசு இருந்தபோது குடும்பத்தின் மாத செலவு பத்தாயிரம் ரூபாய் என இருந்தது. தற்போது திமுக அரசில் அது இருமடங்காக உயர்ந்துள்ளது காரணம், விலைவாசி உயர்வு.

மின்சார கட்டணம் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. வரியை குறைப்போம், வசதியை பெருக்குவோம் என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர். அதிமுக ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து தற்போதுள்ள முதலமைச்சர் கருப்பு சட்டை போட்டு கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். தற்போது அவரே அந்த மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளார். மின்சார கட்டணத்தை குறைக்க சொல்லவில்லை, அதிகப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று தான் அதிமுகவினர் சொல்கிறோம்.  மக்களுடைய பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் ஒரே கட்சி அதிமுக தான் என்று பேசினார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow