Rajini: டெல்லியை தொடர்ந்து ஆந்திரா... சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கெத்து காட்டிய ரஜினி!

ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.

Jun 12, 2024 - 12:31
Rajini: டெல்லியை தொடர்ந்து ஆந்திரா... சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கெத்து காட்டிய ரஜினி!

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன், ஆந்திரா மாநிலத்துக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, 135 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. அதேநேரம் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா பார்ட்டி 21 இடங்களிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றன.  

ஆளும் கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது. இதனால் எதிர்க்கட்சிக்கான தகுதியை கூட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று விஜயவாடாவில் ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் சந்திரபாபு நாயுடு. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் தனது மனவியுடன் கலந்துகொண்டார். அவரை டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி வரவேற்று மேடையில் அமர வைத்தார். அப்போது தனக்கு பின் வரிசையில் இருந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உடன், ரஜினி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அதேபோல், டோலிவுட் மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா, சந்திரபாபு நாயுடு, அவரது மகன் உள்ளிட்ட பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வரவேற்று வணக்கம் தெரிவித்தனர். ரஜினிக்கு அருகிலேயே அவரது மனைவி லதாவுக்கும் இருக்கை போடப்பட்டிருந்தது. முன்னதாக டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மனைவியுடன் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது தனது நண்பரான சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவிலும் ரஜினி பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் ரஜினி கலந்துகொண்ட வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது டப்பிங் கொடுக்க ரெடியாகிவிட்டார் ரஜினி. இதனிடையே கடந்த 10ம் தேதியே கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், சொன்ன தேதியில் கூலி ஷூட்டிங் தொடங்கவில்லை என சொல்லப்படுகிறது. மோடி, சந்திரபாபு நாயுடு ஆகியோரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதால் தான், ரஜினி கூலி பட ஷூட்டிங்கை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜூலை முதல் வாரத்தில் தான் கூலி படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow