"முதல்வர் விஜய்க்கு பிரமாண்ட பாராட்டு விழா! ரெட் ஜெயண்ட் மீது திருச்சி ஸ்ரீதரின் பரபரப்பு குற்றச்சாட்டு"
முதல்வர் விஜய்க்கு திரையுலகம் சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாக திருச்சி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேலும், திரையரங்கு உரிமம் புதுப்பிப்பில் லஞ்சம் ஒழிக்க வேண்டும் என்றும், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் ஆதிக்கம் குறித்து அரசின் தலையீட்டை வலியுறுத்தியும் அவர் பேசியுள்ளார்.
வெ.க. ஆட்சிக்கு வந்த 5 பிறகு பாராட்டு விழா எதுவும் நடைபெறவே இல்லையே என்ற குறையை தீர்த்து வைக்க துடிக்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் அசோசியேஷன் இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர். "முதல்வர் விஜய்க்கு பாராட்டுவிழா நடத்தியே தீருவேன்” என்று அவர் சொல்வதுடன், "தமிழ் சினிமா இன்னும் தி.மு.க. தொடர்புடைய ரெட்
ஜெயண்ட் கரங்களில்தான் இருக்கிறது” என்று அணுகுண்டும் தூக்கிப் போடுகிறார்!
அவரிடம் பேசினோம். "சினிமா உலகத்தில் இருந்து மீண்டும் ஒரு முதல்வர் வந்திருப்பதால், தற்போதுள்ள சினிமா தொடர்பான பிரச்னைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றுவருகிறேன். முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். அவரிடம் பேசி அனுமதி வாங்கியபிறகு திரையுலகம் சார்பில் வருகின்ற டிசம்பர் மாதம் அவருக்கு பிரமாண்டமான பாராட்டு விழா நடத்த திட்டமிட்டிருக்கிறோம். முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் முதல்வரானபோது திரையுலகம் சார்பில் இதேபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. பெப்சி இயக்குனர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இந்த விழாவை முன்னின்று நடத்த உள்ளது' என்றவர், தொடர்ந்து பேசினார்.
"ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கூடங்கள் தங்களது உரிமத்தை அரசாங்கத்திடம் புதுப்பிக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட பள்ளி பணம் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது வந்துள்ள த.வெ.க அரசு அதை இலவசமாக மாற்றியுள்ளது. 'இதனால் தற்போது 400 கோடி ரூபாய் எங்களுக்கு மிச்சம்' என தனியார் பள்ளிகள் சங்கம் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது. இதேபோல திரையரங்கு உரிமையாளர்களான எங்களிடமும் ஒரு வேண்டுகோள் உள்ளது. ஒவ்வொரு திரையரங்கமும் பல்வேறு காரணங்களுக்காக சர்டிஃபிகேட்டும் வருடந்தோறும் திரையரங்க உரிமத்தை புதுப்பிக்க வேண்டியதாக இருக்கிறது. இதற்கு லஞ்சமாக ஏகப்பட்ட பணம் கொடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள 1,100 திரையரங்க உரிமையாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்களுக்கும் லஞ்சம் இல்லாமல் திரையரங்கு உரிமத்தை புதுப்பித்து தர முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி ஸ்ரீதர் அதிரடி
தி.மு.க. தற்போது ஆட்சியில் இல்லையென் றாலும் ரெட் ஜெயண்ட் தொடர்ந்து படங்களை வாங்கிக் குவித்துவருகிறது. ஆனால், நேரடியாக இல்லாமல் வேறு வேறு நிறுவனங்களின் பெயர்களில் வாங்குகிறது. கிட்டத்தட்ட 17 படங்கள் தற்போது அவர்களின் கைவசம் இருக்கின்றன. அதில் பெரிய படங்கள் ரிலீஸாகும்போது, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான விலைக்கு டிக்கெட் விற்க விநியோகஸ்தர்கள் எங்களைக் கட்டாயப்படுத்துகின்றனர். ஆன்லைன் டிக்கெட் விலையையும் கூடுதலாக்கி அந்த கூடுதல் சதவீத தொகையையும் அவர்களே எடுத்துக்கொள்கின்றனர். எனவே புதிய அரசு இதில் தலையிட்டு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
சினிமா கேண்டீன் கொள்ளையை சொல்ல மறந்துட் டீங்களே!
What's Your Reaction?