7 நாட்கள் கழித்து வாங்கப்பட்ட ரவுடி ராமர் பாண்டியின் உடல்!

Feb 26, 2024 - 12:52
Feb 26, 2024 - 15:08
7 நாட்கள் கழித்து வாங்கப்பட்ட ரவுடி ராமர் பாண்டியின் உடல்!

மதுரை அருகே பெட்ரோல் குண்டு வீசி 7 பேரை கொலை செய்த வழக்கில், முதல் குற்றவாளியான ரவுடி ராமர் பாண்டியன் தலைதுண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் 7 நாட்கள் கழித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர்பாண்டி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசியதில் 7 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் முதல் குற்றவாளியாக ராமர்பாண்டி, உள்ளிட்ட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து எதிர்தரப்பினர் ராமர் பாண்டி சென்ற வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த வழக்கு கரூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்து விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த ராமர் பாண்டியனை, பின்தொடந்த கும்பல் ஒன்று அரவக்குறிச்சி தடா கோயில் பகுதியில் வைத்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது.இதனைத் தொடர்ந்து, ராமர் பாண்டியன் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. 

சம்பந்தப்பட்ட கொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, ராமர் பாண்டியின்  உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கடந்த ஏழு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களுடன் காவல்துறையினர் தொடர்ந்து  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த ராமர் பாண்டியனின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.  தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமர் பாண்டியனின் உடல் மதுரை அனுப்பானடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow