பாஜக வெற்றி செல்லாது - மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றம் அதிரடி

Feb 20, 2024 - 19:02
Feb 20, 2024 - 19:17
பாஜக வெற்றி செல்லாது - மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றம் அதிரடி

சண்டிகர் மேயர் தேர்தலில் அதிகாரி செய்த முறைகேடால் ஒட்டுமொத்த தேர்தலை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பாஜக வெற்றி செல்லாது என அதிரடியாக அறிவித்துள்ளது.

சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதில் பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இந்தியா கூட்டணியின்  வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

ஆனால், பாஜக குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக குற்றம்சாட்டியது. வாக்குச் சீட்டுகளில் தேர்தல் அதிகாரி அனில் மாக்‌ஷி, முறைகேடு செய்ததாக கூறி வெளியான வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று (பிப்.19) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. குறிப்பாக, வாக்குச் சீட்டுகளில் 'எக்ஸ்' குறியிட்டது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து தவறு செய்ததை தேர்தல் அதிகாரி அனில் மாக்சி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அனில் மாக்சி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் அதிகாரி ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது முதன்முறை என்பதால் இந்த வழக்கு நாடு முழுவதும் பேசப்பட்டது. 

முன்னதாக மேயர் பதவியை பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் ராஜினாமா செய்தார். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பூனம் தேவி, நேகா முஸ்வாத், குர்சரண் கலா ஆகிய 3 கவுன்சிலர்களும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவடேவை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர்.  இந்நிலையில், இன்று (பிப்.20) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக பதிவான 8 வாக்குகள் வேண்டுமென்றே செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. இதற்காக ஒட்டு மொத்த தேர்தலையும் ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்தது.  இதையடுத்து மேயர் பதவி ஆம் ஆத்மி கட்சிக்கும், துணை மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow