பள்ளி வகுப்பறையில் கஞ்சா கொண்டு வந்த மாணவனால் பரபரப்பு
அரசு பள்ளியில் வகுப்பறைக்கு கஞ்சா மறைத்து கொண்டு வந்த பிளஸ் 1 மாணவனை, ஆசிரியர்கள் போலீசாரிடம் ஒப்படைத்த பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது உடமைகளை பள்ளி ஆசிரியர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது குறிப்பிட்ட மாணவன் தனது இடுப்பில் கஞ்சா பொட்டலம் மறைந்து வைத்திருந்ததை கண்டு பிடித்த ஆசிரியர் அதிர்ச்சி அடைந்து உடனே இது குறித்து தலைமைச் ஆசிரியைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் தலைமை ஆசிரியை மாணவனிடம் இருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து உடனே எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சாவை மறைந்து கொண்டு வந்த மாணவனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுவன் தான் பள்ளிக்கு வரும் வழியில் கஞ்சா பொட்டலம் கீழே கிடந்ததாகவும் அதை எடுத்து கொண்டு பள்ளிக்கு வந்ததாக தெரிவித்ததாக தெரிகிறது. இருப்பினும் மாணவன் கூறுவது உண்மையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் மாணவன் கூறும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
What's Your Reaction?

