உயிருக்கு ஆபத்து.. நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலம்.. சிக்கும் பெரும்புள்ளிகள்
தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களைப் பற்றி மரண வாக்குமூலம் எழுதி வைத்துள்ளார் திருநெல்வேலியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் KPK ஜெயக்குமார். அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டாரா?தற்கொலை செய்து கொண்டாரா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
![உயிருக்கு ஆபத்து.. நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலம்.. சிக்கும் பெரும்புள்ளிகள்](https://kumudam.com/uploads/images/202405/image_870x_6635de8e41cb2.jpg)
திருநெல்வேலியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் KPK ஜெயக்குமார். இவர் கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரண வாக்குமூலம் என புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் எனக்கு சமீப காலமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அரசியலில் இதெல்லாம் சகஜம் என நினைத்து கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது 3 தடவை எனது வீட்டு அருகே இரவில் ஆள் நடமாட்டம் சந்தேகத்திற்கு இடமாக வந்து செல்கின்றனர்.
இதனால் எனக்கு ஏதாவது நேர்ந்தால் கீழ்கண்ட நபர்களின் சதியாக இருக்கும் என சந்தேகப்படுபவர்களின் பெயர்களையும் அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் கள்ளிகுளத்தை சேர்ந்த முன்னாள் கோவில் தர்மகர்த்தாவும், ஊராட்சிமன்ற தலைவருமான ஆனந்த ராஜா தன்னிடம் 18 ஆண்டுக்கு முன்பு 46 லட்சம் கடன் பெற்ற நிலையில் அதற்கு பதில் 7.80 ஏக்கர் நிலத்தை எனது பெயருக்கு எழுதி கொடுத்தார். தற்போது அந்த நிலமதிப்பு உயர்ந்துள்ளதால் அதை திரும்ப தரக்கோரி மிரட்டினார். எனவே ஆனந்த ராஜாவால் ஆபத்து உள்ளது.
குத்தாலிங்கம் என்பவரிடம்14 வருடத்திற்கு முன்பு வாங்கிய பணத்தை வட்டியோடு செலுத்திய பிறகும் முன் கொடுத்த வங்கி காசோலையை பயன்படுத்தி வழக்கு தொடர்வேன், கொலை செய்வேன் என பலமுறை மிரட்டுகிறார். அவரால் ஆபத்து உள்ளது.
அதே போல இடையன்குடியை சேர்ந்த சிசிஎம் பள்ளி மேலாளர் ஜெய்கர் பள்ளியில் கட்டிடம் கட்ட பாக்கி தொகை சுமார் 30 லட்சம் ரூபாயை தரவிடாமல் தடுத்து வருகிறார். நான் நேரில் கேட்டதற்கு அது அப்பாவு எம் எல் ஏ தான் முடிவு செய்ய வேண்டும். அவரிடம் பேசுங்கள், மீறி செயல்பட்டால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார். தபால் அனுப்பி பணம் கேட்டு கோரிக்கை வைத்ததற்கு உன் நடவடிக்கை கொலையில் தான் முடியும் என மிரட்டினார்.
மேலும் நாங்குநேரி எம்எல்ஏ ரூபிமனோகரன் 3 வருடமான என்னிட நிறைய காரியங்கள் செய்து தருவதாக சுமார் 70 லட்சத்திற்கு மேல் பணம் வாங்கி இருக்கிறார். எந்த காரியும் செய்து தரவில்லை, சொன்னபடி எந்த காண்ட்ராக்ட் வேலையும் தரவில்லை. தற்போது எம்பி தேர்தலுக்கு என்னை செலவு செய்ய சொன்னார். அதில் சுமார் 8 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி விட்டனர். கேட்டதற்கு என்னை கொலை செய்வேன் என மருகால் குறிச்சியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் மூலம் என்னை நேரில் மிரட்டினார். அதனால் அவரால் உயிருக்கு ஆபத்து உள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கேவி தங்கபாலு என்பவர் தேர்தல் வேலைக்கு என்னிடம் பணம் பெற்று செலவு செய்தார். சுமார் 11 லட்சம் ரூபி மனோகரன் எம் எல் ஏவிடம் வாங்கி கொள் என சொல்லி முடித்து விட்டார். அவரிடம் கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார்.
என மேலும் ஒரு சிலர் பெயரை குறிப்பிட்டு இந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் பலரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னை ஏமாற்றியதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த கடிதம் கொடுத்து 4 நாட்களே ஆன நிலையில் திருநெல்வேலியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான KPK.ஜெயக்குமார் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 02.05.24 ம் தேதி மாலை 7.45 மணிக்கு தனது தந்தை வீட்டில் இருந்து சென்றதாகவும் தற்போது வரை வீடு திரும்பவில்லை. எனவே இரண்டு நாட்களாக காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் கருத்தையா ஜாப்ரின் 03.05.24 நெல்லை மாவட்டம் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து விளக்கம் அளித்த நெல்லை மாவட்ட எஸ்பி, கேபிகே ஜெயக்குமார் காணாமல் போனதாக அவரது மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். தனக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வருவதாக KPK.ஜெயகுமார் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைபெறுவதாக எஸ்.பி சிலம்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.
KPK ஜெயக்குமார் காணவில்லை என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் தற்போது ஜெயக்குமாரின் சொந்த ஊரான கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் சடலமாக எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)