தவெக ஆட்சி மூன்று மாதமாவது தாங்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது ? முன்னாள் அமைச்சர் தங்கம் விமர்சனம் 

தவெக ஆட்சி  “மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். 

தவெக ஆட்சி மூன்று மாதமாவது தாங்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது ? முன்னாள் அமைச்சர் தங்கம் விமர்சனம் 
முன்னாள் அமைச்சர் தங்கம் விமர்சனம் 

விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர்.

ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது தூய சக்தி என்று கபட வேடம் போடும் அரசு.

“இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம்” என்று எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தாலும், நிலைமை மிக மோசமாகப் போய்வரும் நிலையில் அவர் விமர்சனம் செய்தார். “ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க்கொண்டு இருக்கிறது” என்று தலைவர் அவர்கள் பேசினார்கள். ஆனால், மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர் சொன்னதாகத் திரித்து செய்தி பரப்பப்படுகிறது.

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க. தலைவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பேசி உள்ளனர். ஆட்சி கவிழும் என்று தலைவர் அவர்கள் பேசவுமில்லை; அது அவரது நிலைப்பாடும் அல்ல!

“ஆறு மாதம் வரை, இந்த ஆட்சி பற்றி விமர்சித்துப் பேசப் போவதில்லை” என்று அவர் சொல்லியிருந்தார். ஆனால் நாள்தோறும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டுகள், போதை மருந்துகள் நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சுகள், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதைப் பார்க்கும் போது, இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், “மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என்று பொருள்படும்படிதான் சொன்னார்கள். 

ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால் இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூகவலைத்தளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளைத்தான் மக்கள் சொல்லி வருகிறார்கள்.இதைத்தான் தலைவர் அவர்கள் தனது உரையில் சுட்டிக் காட்டினார்கள். கலைப்பு, கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள் அதற்குள்!. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow