விஜய் நாளையும் பதவி ஏற்பு இல்லை : இன்று இரவு கேரளம் செல்லும் ஆளுநர்
தவெகவிற்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆதரவு கிடைத்தாலும் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் இருக்கமாட்டார் என தெரிகிறது. இன்று இரவு ஆளுநர் கேரளம் பயணமாக உள்ளதால் பதவி ஏற்பு மேலும் தாமதம் ஆகும் என தெரிகிறது.
தவெகவிற்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என ஆளுநர் அர்லேகர் உறுதியாக உள்ளார். இதனால் ஆட்சி அமைக்க தேவைப்படும் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற தவெக கடுமையாக போராடி வருகிறது. கம்யூனிஸ்ட்டுகள் தங்களது ஆதரவை அளித்துவிட்டது. மீதம் தேவைப்படும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவை பெற விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது.
விசிகவும் தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளது. அதில் கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாட்டை விசிக எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. விசிக அளிக்கும் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு கோர இருக்கிறார். ஆனால் நேற்றைய தினம் விஜய் ஆளுநரிடம் ஆதரவு கடிதம் கொடுத்ததில் சிக்கல் ஏற்பட்டது.
அமமுக எம்எல்ஏ பெயரில் தவெக கொடுத்த கடிதம் போலி என சர்ச்சை எழுந்துள்ளது. அதனால் ஆதரவு அளிக்கும் கட்சி குறித்து ஆளுநர் மாளிகை விசாரணை நடத்தி அதன் பின்னர் ஆட்சிக்கு அழைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் என தெரிகிறது. இந்த நிலையில், இன்று இரவு 7.10 மணியளவில் ஆளுநர் அர்லேகர் கேரளம் செல்கிறார். இதனால் மெஜாரிட்டி கிடைத்தாலும் ஆட்சி அமைப்பதில் தவெகவிற்கு மேலும் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
What's Your Reaction?