பிரதமர் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறு - அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்

திமுக தலைவர்கள் புதிய தாழ்வு நிலையை அடைந்துள்ளனர் - அண்ணாமலை

Mar 24, 2024 - 14:00
பிரதமர் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறு - அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்

பிரதமர் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாக பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற திமுக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமரை ஒருமையில் குறிப்பிட்டு பேசினார். அவரது பேச்சு அரசியல் களத்தில் தற்போது சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், "பிரதமர் மோடிக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளையும் மன்னிக்க முடியாத வகையிலும் பேசி திமுக தலைவர்கள் தங்களின் நேர்மையற்ற நடத்தையில் புதிய தாழ்வு நிலையை அடைந்துள்ளனர். மேடையில் இருந்த திமுக எம்.பி. கனிமொழி கூட அமைச்சரின் பேச்சை தடுக்கவில்லை. எனவே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபியிடம் தமிழ்நாடு பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார். 

இதனிடையே அமைச்சர் பேசியது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் கடிதம் அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அனிதா ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும் எனவும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்வோம் எனவும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow