இந்திய பவுலர்களை அலறவிட்ட லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்.. பும்ரா செய்த மேஜிக்

லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா லார்ட்ஸ் மைதானத்தில் முதன் முறையாக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்திய பவுலர்களை அலறவிட்ட லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்.. பும்ரா செய்த மேஜிக்
lords Test match: Bumrah show his masterclass

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடரானது 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன.

லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட்:

இந்நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூலை 10, 2025) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

வழக்கமான தனது “பேஸ்பால்” ஆட்டத்தை இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் கைவிட்டு இருந்தது பலருக்கும் வியப்பை தந்தது. நிதானமாக ரன்களை எடுப்பது இங்கிலாந்து அணியின் திட்டமாகவும் இருந்தது. தொடக்க வீரர்களான ஜேக் 18 ரன்களிலும், பென் டக்கட் 23 ரன்களிலும் நிதிஷ் ரெட்டி பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

போப் மற்றும் ஜோ ரூட் இங்கிலாந்து அணியினை சரிவிலிருந்து மீட்கத் தொடங்கியது. ஒருக்கட்டத்தில் போப் 44 ரன்களிலும், ஹேரி ப்ரூக் 11 ரன்களிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்ப மறுமுனையில் அசராமல் இருந்தார் ஜோ ரூட். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 99 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஜோ ரூட் புதிய சாதனை:

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியபோது, முதல் பந்திலேயே பும்ராவின் பந்தினை எதிர்க்கொண்ட ரூட், லாவகமாக சிங்கிள் தட்டிவிட்டு டெஸ்ட் அரங்கில் தனது 37-வது சதத்தினை பதிவு செய்தார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் (36 சதம்) மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை (36 சதம்) முந்தி டாப் 5 வீரர்கள் பட்டியலில் இணைந்தார். 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோ ரூட், பும்ராவின் பந்தில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அதற்கு அடுத்த பந்தை வோக்ஸ் விக்கெட்டினை வீழ்த்த ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.

இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு 7 விக்கெட்கள் என இருந்த நிலையில், 300 ரன்களுக்குள் இந்திய அணி எப்படியும் சுருட்டி விடும் என மனக்கோட்டை கட்டிய இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் கார்சே. ஜேமி ஸ்மித்துடன் இணைந்து விரைவாக ரன்களை குவிக்கத் தொடங்கினார். இவர்களது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறியது.

பும்ரா மேஜிக்:

ஜேமி ஸ்மித் விக்கெட்டை ஒருவழியாக சிராஜ் கைப்பற்ற, அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத்தொடங்கின. ஆர்ச்சரை பும்ரா போல்ட் அவுட் செய்தார். இதன் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் முதன் முறையாக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் பும்ரா.

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்றைப் புரட்டி பார்த்தால், முதல் இன்னிங்க்ஸில் 350 ரன்களுக்கு மேல் குவித்த அணி, இரண்டு முறை மட்டும் தான் தோற்றுள்ளது. இந்திய அணி தற்போது களமிறங்கி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் நிலையில் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow