அடுத்த விக்கெட் இவரா? டார்கெட் செய்யப்படும் மத்திய அமைச்சர்..!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை குறிவைத்து சமூக வலைதளங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்பான எத்தனால் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘E20 Janta Party’ என்ற பெயரில் செயல்படும் ஆன்லைன் அமைப்பு, நிதின் கட்கரியின் ராஜினாமாவை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
E20 எரிபொருள் என்பது 20 சதவீத எத்தனால் மற்றும் 80 சதவீத பெட்ரோல் கலவையாகும். கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தல், வாகன மாசுபாட்டை கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், பழைய வாகனங்களில் பாதிப்பு ஏற்படும் அபாயம், எரிபொருள் திறன் குறைதல் மற்றும் எத்தனால் உற்பத்திக்கு அதிகளவு நீர் தேவைப்படுவது உள்ளிட்ட காரணங்களால் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
‘E20 Janta Party’ என்ற பெயர் கொண்ட X கணக்கு, 2024 மே மாதம் முதலே செயல்பட்டு வந்ததாகவும், சமீபத்தில் தற்போதைய சமூக வலைதளப் போக்கை பயன்படுத்தும் வகையில் பெயர் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சில மணி நேரங்களில் X தளத்தில் 25,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களை பெற்ற இந்த அமைப்பு, ஜூலை திங்கள்கிழமை காலை 48,000-ஐ கடந்தது. Instagram-லும் 1 லட்சம் பின்தொடர்பாளர்களை பெற்றுள்ளது.
இது அரசியல் கட்சி அல்ல என்றும், நுகர்வோர் உரிமைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் கருத்துரிமைக்காக செயல்படும் சுயாதீன குடிமக்கள் இயக்கம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எரிபொருள் தேர்வில் நுகர்வோருக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை எனக் கூறியுள்ள அவர்கள், “Nitin Gadkari ji must Resign!” எனவும் பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே, எத்தனால் விவகாரம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக சிலர் மீது நாக்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.
What's Your Reaction?