"ஊழல் இல்லாத அமைச்சர்கள் வேண்டும்" மோடி அரசில் தான் அவர்கள் உள்ளார்கள்.. பாரிவேந்தர் பரப்புரை..
!["ஊழல் இல்லாத அமைச்சர்கள் வேண்டும்" மோடி அரசில் தான் அவர்கள் உள்ளார்கள்.. பாரிவேந்தர் பரப்புரை..](https://kumudam.com/uploads/images/202404/image_870x_660c1f3c2f3ed.jpg)
நாட்டிற்கு ஊழல் இல்லாத அமைச்சர்கள்தான் தேவை, அப்படிப்பட்ட அமைச்சர்கள் மோடி அரசில் தான் உள்ளார்கள் என ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி, அரும்பாவூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட பாரிவேந்தர், 5 ஆண்டுகளாக மத்திய அரசு கொடுத்த நிதியில் ஒரு பைசா கூட திருப்பி அனுப்பாமல் அவ்வளவு நிதியையும் பெரம்பலூர் மக்களுக்கு நலத்திட்டங்களாக கொடுத்துள்ளேன் எனக் கூறினார். தமிழ்நாட்டில் அத்தனை அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், சில அமைச்சர்கள் போக வேண்டிய இடத்திற்கு போய்விட்டார்கள் எனவும் விமர்சித்தார். மேலும், தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத நல்ல அமைச்சர்கள் நமக்கு வேண்டும் எனவும் அந்த அமைச்சர்கள் மோடி அரசில் உள்ளது போல் இருக்க வேண்டும் எனவும் பாரிவேந்தர் கூறினார்.
இதையடுத்து பூலாம்பாடி பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட பாரிவேந்தர், 5 ஆண்டுகளில், பெரம்பலூர் தொகுதியில், 118 கோடி ரூபாய் தனது சொந்த செலவில் ஆயிரத்து 200 மாணவர்களை உயர்கல்வி பயில வைத்துள்ளேன் எனக் கூறினார். அதேபோல் இந்த முறையும் தன்னை வெற்றி பெற வைத்தால் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் இலவசமாக உயர் மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வேன் எனவும் பாரிவேந்தர் உறுதியளித்தார்.
தொடர்ந்து திருச்சி மாவட்டம் முசிறி அருகே பாரிவேந்தருக்கு ஆதரவு தெரிவித்து தேவேந்திர வேளாளர் சமூக மக்கள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய பாரிவேந்தர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு உறுதுணையாக இருப்பேன் எனக் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சமுதாயங்கள் ஒற்றுமையுடன் இல்லாத காரணத்தால், ஆந்திராவில் இருந்து வந்த ஒரு கூட்டம் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்தியாவின் பெருமையையும் பொருளாதாரத்தையும் பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார் எனவும் வெளிநாட்டு காரர்களே இப்படி ஒரு பிரதமர் நமக்கு இல்லையே என வருத்தப்படுகிறார்கள் பாரிவேந்தர் எனவும் கூறினார். அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் செல்லும் இடமெல்லாம் மக்களுக்கு அவருக்கு அமோக ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது...
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)