FIFA உலகக்கோப்பை: கனடா நிராகரித்த 70% இந்தியர்களின் விசா..? ஆய்வில் அதிர்ச்சி!
கனடாவில் நடைபெறவுள்ள FIFA கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளைக் காண விண்ணப்பித்த இந்தியர்களில் சுமார் 70 சதவீத பேரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் FIFA உலகக்கோப்பை போட்டியை, இந்தாண்டு கனடா, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. இந்நிலையில் இப்போட்டிகளை நேரில் காண பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் இந்த மூன்று நாடுகளில் போட்டிகள் நடைபெற உள்ள நகரங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கானோர் விசா விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடர்பாக அதிகளவில் விசா விண்ணப்பங்கள் அளிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கனடாவில் நடக்கும் போட்டிகளை காண இந்திய ரசிகர்களின் ஆர்வம் அதிகமாக இருந்தபோதிலும், அவர்களில் பெரும்பாலானோரின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விசா நிராகரிப்புக்கான முக்கிய காரணங்களாக பயண நோக்கத்தின் தெளிவின்மை, நிதி ஆதார ஆவணங்களில் குறைபாடு, தாய்நாட்டுடன் போதுமான தொடர்புகள் இல்லாதது உள்ளிட்டவை கூறப்படுகின்றன. எனினும், இதுகுறித்து கனடா அதிகாரிகள் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிடவில்லை.
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்தவுள்ள FIFA உலகக்கோப்பை போட்டிகளை காண இந்தியாவில் இருந்து அதிகளவிலான ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், விசா நிராகரிப்பு விகிதம் அதிகமாக இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சரியான ஆவணங்கள் மற்றும் பயணத் திட்ட விவரங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு விசா கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பயண நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?









