“தோனியை வீழ்த்துவதே லட்சியமாக இருந்தது” - குட்டி ஸ்டோரி புத்தகத்தை வெளியிட்டு அஸ்வின் பேச்சு

இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல, ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுவதை நான் உணர்ந்துள்ளேன்.

Jun 21, 2024 - 20:25
“தோனியை வீழ்த்துவதே லட்சியமாக இருந்தது” - குட்டி ஸ்டோரி புத்தகத்தை வெளியிட்டு அஸ்வின் பேச்சு

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கிரிக்கெட் பயணத்தை "I Have the Street" - குட்டி கிரிக்கெட் ஸ்டோரி என்ற பெயரில் எழுது வெளியிட்டுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பத்திரிக்கையாளர் சித்தார்த் எழுதிய இந்த புத்தகத்தை தனியார் நட்சத்திர விடுதியில் அஸ்வினே வெளியிட்டார். இந்த புத்தகத்தை நான்கு ஆண்டுகள் முயற்சிக்கு பின் எழுதி முடிந்ததாக கூறினார்.

அஸ்வினின் சுயசரிதை புத்தகமாக இல்லாமல் அவருடைய கிரிக்கெட் தொடர்பான அனுபவங்களை குட்டி ஸ்டோரியாக இதில் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் சிறு வயதில், காசநோய் பாதிப்பு காரணமாக, தன்னால் உணவு உண்ண முடியாமலும், நீர் அருந்த முடியாமலும் தவித்ததையும், அப்படியே அருந்தினால், வாந்தி எடுத்ததையும், ஓடினால் இருமல் வந்ததையும், ஆனாலும் தான் தொடர்ந்து விளையாடியதையும் அஸ்வின் விளக்கி உள்ளார்.

இந்த புத்தகத்திற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் முன்னுரை எழுதியுள்ளார். புத்தகத்தை வெளியிட்டு பேசிய அஸ்வின், இந்திய அணியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல என உரையை தொடங்கினார். புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் தான் இந்திய அணிக்கு தேர்வான சமயத்தில் ஹிந்தி தெரியாமல் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார். ஹிந்தி தெரியாது போடா அப்படினு சொல்லலாம் என்று கிண்டலாக பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘கிரிக்கெட் விளையாட்டில் மெட்ராஸ், தமிழ்நாடு தொடர்ந்து இந்தியாவிலிருந்தே தனியாகவே இருக்கிறது. இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல, ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுவதை நான் உணர்ந்துள்ளேன்’ என்றார்.

அத்துடன் தோனியின் விக்கெட்டை வீழ்த்துவதே இலட்சியமாக வைத்திருந்ததையும், ஃபேஸ்புக் வாயிலாக உலகக் கோப்பைக்கு தேர்வானதை தோனி கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

எனது அப்பா என்னை பேட்ஸ்மேனாகத்தான் உருவாக்க நினைத்தார். ஆனால் நான் ஆஃப் ஸ்பின்னர், பேட்ஸ்மேன் கிடையாது என்று அப்பாவிடம் திட்டவட்டமாக கூறியதையும் எடுத்துரைத்தார். மேலும்  அதுதான் என்னுடைய வாழ்க்கையை மாற்றிய தருணம் என்றும் தான் ஆஃப் ஸ்பின்னரான கதையை விவரித்தார்.

ராமகிருஷ்ணபுரம் தெருவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் என்னால் மறக்கவே முடியாத நிகழ்வு என்றும், 2016 வரை தெருவில் கிரிக்கெட் விளையாடினேன் எனவும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow