"விளம்பர மயக்கத்தில் தவெக ...... கடுமையாக சாடிய எம்பி கனிமொழி!
மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி.கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு இதுகுறித்து மௌனம் காப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக கர்நாடக அரசு அறிவித்திருப்பது கவலைக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம். மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு? டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர்ப் பிரச்சினை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது. தவெக அரசு இனியும் இப்பிரச்சனையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் கடந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் கனிமொழி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?

