நீதிமன்றத்திற்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் போட்ட ஆர்டர்

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில்பாலாஜி  சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.

Apr 9, 2025 - 17:48
நீதிமன்றத்திற்கு வந்த  அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் போட்ட ஆர்டர்
நீதிமன்றத்திற்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில்  சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி. சண்முகம், எம்.கார்த்திகேயன், ஜி.கணேசன், எம்.வெற்றிச் செல்வன், எஸ்.அருண் ரவீந்திரா டேனியல், டி. ஆல்பர்ட் தினகரன், எஸ் ஜெயராஜ் குமார், சி.பழனி, எஸ்.லோகநாதன்,டி.பிரபு, அனுராத ரமேஷ் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு:

இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 9 ம் தேதி நேரில் ஆஜராகும்படி அசோக்குமார் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. அதன்படி இன்று இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நேரில் ஆஜாரகினர்.

அமலாக்கதுறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகையுடன் சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளது. இதனை சிடியில் தருவதாக கூறினார். இதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மின்னனு ஆவணமாக இல்லமால் காகித வடிவில் வழங்க வேண்டும் எனவும் அப்போது தான் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் உறுதித்தன்மை நிலை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு மேற்கொண்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 25 தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி ஜாமின் உத்தரவாத தொகையாக 2 லட்ச ரூபாய் செல்லுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow