திருப்பதி லட்டு விவகாரம்: ”கோயில் பிரச்சனைகளை ஆராய புது வாரியம்...சனாதனம் காப்போம்..” கொதித்தெழுந்த பவன் கல்யாண்

திருப்பதி லட்டு விவகாரத்தில், இந்தியாவில் உள்ள கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.

Sep 20, 2024 - 11:35
திருப்பதி லட்டு விவகாரம்: ”கோயில் பிரச்சனைகளை ஆராய புது வாரியம்...சனாதனம் காப்போம்..” கொதித்தெழுந்த பவன் கல்யாண்

திருப்பதி லட்டு விவகாரத்தில், இந்தியாவில் உள்ள கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.

ஆந்திர மாநிலத்தின் அடையாளமான திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது நடந்ததாக, தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அதாவது, “2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிகவும் புனிதமான திருமலை ஏழுமலையான் கோயிலில், ஜெகன் நிர்வாகம் பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன், ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன்” என்று சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
 
அவரது குற்றச்சாட்டுகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்திருந்தது. மேலும், திருமலையின் புனிதத்தையும் பல கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் சந்திரபாபு நாயுடு கொச்சைப்படுத்தி பேசியுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த ஆய்வின் முடிவில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என லட்டு செய்ய பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கொடுத்த நெய் என்பது உண்மையிலேயே திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தும் நெய் தானா? அல்லது அரசியல் செய்வதற்காக ஏதோ ஒரு நெய்யை கொடுத்து அது திருப்பதி லட்டில் பயன்படுத்தப்படும் நெய் என்று தெலுங்கு தேசம் கட்சியே கூறுகிறதா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

எதுவாக இருந்தாலும், திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை முடிவுகளை கண்ட பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, பலரும் ஜெகன்மோகன் ரெட்டியையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியையும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். “இதுதான் நீங்க நடத்திய ஆட்சியின் லட்சணமா? திருப்பதி கோயிலின் புனிதத்தை கெடுத்துவிட்டீர்களே?” இது நியாயமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ஜெகன் மோகனும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் என்ன பதில் சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் பவன் கல்யாண். அவர் தெரிவித்திருந்ததாவது,”திருப்பதி பிரசாதத்தில் மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொழுப்பு கலந்திருப்பதைக் கண்டு நாம் அனைவரும் மிகவும் கவலையடைந்துள்ளோம். அப்போது ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசால் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

எங்களின் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டுள்ளது. ஆனால், இது கோவில்களை இழிவுபடுத்துவது, அதன் நிலப் பிரச்சினைகள் மற்றும் பிற தர்ம நடைமுறைகளைச் சுற்றியுள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்தியாவில் உள்ள கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. 

தேசிய அளவில் அனைத்து கொள்கை வகுப்பாளர்கள், மத தலைவர்கள், நீதித்துறை, குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் அந்தந்த களங்களில் உள்ள அனைவராலும் ஒரு விவாதம் நடக்க வேண்டும். சனாதன தர்மத்தை எந்த வகையிலும் இழிவுபடுத்துவதை நிறுத்த நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும், என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow