திருவாரூர் அருகே குடியிருப்பு பகுதியில் வடியாத மழைநீர்-சாலையை  வெட்டியபோது குடிநீர் குழாய் உடைந்ததால் மக்கள் அவதி

தோல் நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Nov 29, 2023 - 15:43
Nov 29, 2023 - 17:00
திருவாரூர் அருகே குடியிருப்பு பகுதியில் வடியாத மழைநீர்-சாலையை  வெட்டியபோது குடிநீர் குழாய் உடைந்ததால் மக்கள் அவதி

திருவாரூர் அருகே கடந்த ஒருவார காலமாக மழைநீர் வடியாததால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்தூர் கிராமத்தில் உள்ள அய்யாக்குட்டை தெரு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழைநீர் வடியாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இத்தெருவில் வசிக்கும் குழந்தைகள் பள்ளி செல்ல மிகவும் அவதியுற்று வருவதாகவும், வார கணக்கில் தேங்கி கிடக்கும் மழைநீரில் பள்ளி மாணவ, மாணவியர்கள் செல்வதால் பல்வேறு தொற்றுநோய்களுக்கு உள்ளாகி வருவதோடு, தோல் நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என அப்பகுதி மக்கள் மனவேதனை தெரிவிக்கின்றனர். 

அய்யாக்குட்டை தெருவில் வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் தேங்கி கிடக்கும் மழைநீரால் கடும் பாதிப்புகு ஆளாகி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் மழைநீரை வடியவைக்க பஞ்சாயத்து நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பகுதியினர் சாலையை வெட்டி தண்ணீரை வெளியேற்ற முயன்றபோது அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்து சேதமானதால் தற்போது குடிநீர் பிரச்சனையும் எழுந்துள்ளது.

இது தவிர பத்தூர் ரேஷன் கடை அமைந்துள்ள சாலையும் சேரும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க செல்லமுடியவில்லை. பத்தூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக பலர் பணியாற்றி வந்தபோதிலும், கடந்த 25 ஆண்டுகாலமாக பத்தூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் யாரும் வந்து பணியாற்றியது  கிடையாது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கொரடாச்சேரியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து செயல்படுவதாகவும், இதனால் பல்வேறு நிலைகளில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் பத்தூர் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் வரும் புதன்கிழமை மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் எச்சரித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow