துரந்தர் 2 திரைப்படத்திற்கு தடைக் கோரிய மனு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள தமிழகத்தில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரபலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள துரந்தர் 2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் துரந்தர் 2 திரைப்படம், மார்ச் 19 ம் தேதி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ. அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை விளம்பரப்படுத்தும் வகையில் உள்ள துரந்தர் 2 படத்தை வெளியிட தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ஷீலா, ராகேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ் ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியினர் தங்கள் சாதனைகளை விளக்கி விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என்று தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் வகையில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மறைமுகமாக பிரச்சாரம் செய்யும் வகையில் அமைந்துள்ள துரந்தர் 2 படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. படத்தில் எந்த பகுதி தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளது என்பதை குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை என்பதால் தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
What's Your Reaction?

