விஜய்-உதயநிதி- அண்ணாமலை... ஐ.பி.எஸ். பக்கம் திரள்வார்களா ரஜினி ரசிகர்கள்...?
ரஜினி - விஜய் ரசிகர்களிடம் யார் வசூல் மன்னன் என்பதில் தொடங்கி காக்கா - பருந்து குட்டிக்கதை வரை பல்வேறு மோதல்கள் பல ஆண்டுகளாக தொடர்கின்றன. இந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக இருந்த தங்கள் தலைவர் ஒதுங்கிக்கொள்ள, புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய், முதல்வர் அரியாசனத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து நொந்துபோய் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்!
தமிழகத்தில் இருபெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவையடுத்து, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. இதையடுத்து, 2017 இறுதியில் ஆன்மிக அரசியலை முன்னிறுத்தி அரசியல் களத்தில் நேரடியாக இறங்காமல் வெறுமனே எட்டிப் பார்த்தார். 2020ல் உடல்நலத்தை காரணம் காட்டி அரசியலுக்கு முழுக்கு போட்டார். அவரது வழியில் பயணிக்க முடியாத ரசிகர் மன்ற நிர்வாகிகள். சிறு சிறு குழுவாக மாற்று முகாம்களுக்கு தாவினர்.
இந்த நிலையில், அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியதையடுத்து, அவருடன் கரம் கோக்க ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அண்ணாமலை திரைப்படக் காட்சிகளுடன், ஒரிஜினல் அண்ணாமலையின் பேச்சுகளை இணைத்து உணர்ச்சிப்பூர்வமான வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டி, கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் மைசூரில் இருந்து ஊட்டி வந்து ஒருநாள் தங்கிச் சென்றார் ரஜினி. அன்றைய தினம் அவரை நீலகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் குமார் சந்தித்துப் பேசிய தகவல் கிடைக்கவே அவரிடம் பேசினோம். ”உதவியாளர்கள்கூட இல்லாமல் ஓய்வுக்காக தலைவர் வந்திருந்தார். அவரைச் சந்திக்க வேண்டும் என தகவல் அனுப்பினோம். உடனே உற்சாகமாக எங்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். வேறெதுவும் எங்களிடம் அவர் பேசவில்லை" என்றார்.
அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்து கேட்டபோது "தலைவர் ரஜினி விரும்பிய மாற்றத்தை படித்த இளைஞர் ஒருவரால்தான் தர முடியும். அந்த வகையில் அண்ணாமலை துடிப்பானவர். அவரை ஆதரிப்பதில் எங்களுக்கு விருப்பம்தான். தலைவர் கட்சி ஆரம்பிப்பார் என்பதற்காக மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட பூத் கமிட்டிகள் அப்படியே இருக்கின்றன. அண்ணாமலையின் இயக்கத்தோடு இணைந்து செயல்பட அனைவரும் தயாராக இருக்கிறோம். அதற்கேற்ற முடிவை தலைவர் தான் எடுக்க வேண்டும்” என்றார்.
ஈரோடு மாவட்ட ரஜினி மன்றச் செயலாளர் சாம்ராஜ் "திமுக அதிமுகவில் தொடங்கி த.வெ.க. வரை எத்தனையோ கட்சிகள் அவரவர் பக்கம் எங்களை இழுக்க முயற்சித்தன. ஆனால், தலைவரின் ரசிகர்களாக மட்டுமே தொடர்வோம் என உறுதியாக இருக்கிறோம். அதே நேரத்தில் தற்போது அண்ணாமலையின் புதிய இயக்கம் அறிவிப்பால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம். அதற்கு நாங்களும் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்” என்றார்.
ரஜினியை சமீபத்தில் சந்தித்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷிடம் பேசியபோது, ”ரஜினியும், அண்ணாமலையும் பரஸ்பரம் நட்பும், மரியாதையும் கொண்டவர்கள். தற்போது அண்ணாமலை ஆரம்பித்திருக்கும் இயக்கத்திற்கும், ரஜினிக்கும் தொடர்பிருக்கும் என நான் நினைக்கவில்லை. இருப்பினும், அண்ணாமலை ரஜினியைச் சந்தித்து இது தொடர்பாக பேச வாய்ப்புள்ளது. அப்போதுதான் ரஜினியின் நிலைப்பாடு தெரியவரும். திராவிட இயக்கத்தின்மீது சலிப்புகொண்ட, மாற்றம் வேண்டுமென நினைக்கும் இளைஞர் கூட்டத்தால் கவனிக்கத்தக்க ஆளுமையாக இருக்கிறார் அண்ணாமலை. அதோடு, அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் அண்ணாமலை பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. எதிர்கால அரசியல் விஜய் உதயநிதி அண்ணாமலை என மாறலாம்" என்றார்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்க முடிவு செய்தபோது அவரோடு இணைந்து பயணித்த தமிழருவி மணியனுடன் பேசினோம். "பாஜகவின் கிளை அமைப்பாக இல்லாமல், தமிழக நவனுக்கு முன்னுரிமை அளித்து, போர்க்குணத்துடன் செயல்பட்டால் அறிவார்ந்த இளைஞர்கள் அவர் பின்னாள் வருவார்கள். த.வெ.க.வுக்கு மாற்றாகவும் அண்ணாமலை வரக்கூடும். நல்ல தலைமைக்கான வெற்றிடத்தை அண்ணாமலையால் நிரப்ப முடியும்” என்றவரிடம், ரஜினி ரசிகர்களின் ஆதரவு அண்ணாமலைக்கு கிடைக்குமா? என்றோம் "அதுகுறித்து எனக்குத் தெரியாது யார் யாருக்கு என்ன விருப்பமோ அதை செய்யப் போசிறார்கள்” என்றார்.
இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம் ”தவெகவின் வெற்றியால் சோர்ந்துபோயிருக்கும் ரஜினி. அஜித் ரசிகர்கள். அண்ணாமலை பக்கம் சேர ஆர்வமாக இருக்கிறார்கள். திமுக, பாஜகவை தனது நட்பு சக்திகளாக ரஜினி கருதுகிறார். ஏற்கெனவே, விஜய்க்கும் தனக்கும் மோதலை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படும் தகவல்களால் ரஜினி வேதனை அடைத்துள்ளார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவு என்ற வெளிப்படையான நிலைப்பாட்டை அவர் எடுக்க வாய்ப்பில்லை.
லதா ரஜினிகாந்தின் அறக்கட்டளை சார்பாக 'பாரத் சேவா' என்ற திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கடந்த மார்ச் 7ம் தேதி நடந்தது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் குறைகளை, ஆலோசனைகளைத் தெரிவிக்க 'மக்கள் மேடை' என்ற புதிய தளம் தொடங்கப்பட்டது.
இயக்கம் தொடங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ள இந்த சூழலில். மக்கள் மேடை உறுப்பினர் சேர்க்கையை லதா ரஜினிகாந்த் தீவிரப்படுத்தியுள்ளதை கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது' என்றனர்.
ரஜினி சொன்னதுபோல காலம் காத்திருந்து பதில் சொல்லட்டும்?
- எஸ்.கோவிந்தராஜ்
What's Your Reaction?

