"திமுகவின் பினாமியாக செயல்படும் தவெக" - கோவை சத்யன் விமர்சனம்!
திமுகவின் பினாமியாக தான் தற்போது ஆட்சியில் உள்ள தவெக அரசு செயல்பட்டு கொண்டு இருக்கின்றது என்று அதிமுகவை சேர்ந்த கோவை சத்யன் விமர்சித்துள்ளார்.
திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்றும், தவெக செயல்பாடுகள் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு தனியார் ஊடகத்தில் நடந்த விவாதத்தின் போது அவர் கூறுகையில், “அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படும் பினாமி அரசாங்கம் தமிழகத்தில் உள்ளது. திமுகவின் பினாமி அரசாங்கமாகவே இந்த தவெக அரசாங்கம் செயல்படுகிறது” என விமர்சித்தார்.
மேலும், திமுகவினர் தங்களது தரப்பினரை தவெகவில் அனுப்பி, அதன் மூலம் தங்களுக்கு தேவையானவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஊழலை ஒழிப்பதாகக் கூறி அரசியலுக்கு வந்த முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை எவ்வாறு நம்புவது என தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
அரசுப் பணிகளுக்காக ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பணம் பெறப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், கே.என்.நேருவின் சகோதரர் தொடர்பான ஸ்கிரீன்ஷாட் ஆதாரங்கள் வெளியான நிலையிலும் திமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கோவை சத்யன் தெரிவித்தார்.
இதுபோன்ற விவகாரங்களில் விஜயால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றும், மேகதாது விவகாரம், மாணவர் கொலை உள்ளிட்ட பிரச்சினைகளிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், “ஆட்சியில் பங்கு கொடுக்கிறார்கள்; ஆனால் அதிகாரத்திற்கு வெளியே இருக்கிறார்கள். ஏன்?” என கேள்வி எழுப்பிய கோவை சத்யன், “ரீல் போடுவதை விட்டு வெளியே வந்து ரியலாக ஆட்சி செய்ய சொல்லுங்கள் முதலமைச்சர் விஜயை” என விமர்சித்தார்.
What's Your Reaction?
